இது கதையல்ல நிஜம்...ஐ.ஏ.எஸ் கனவுடன் ஆட்டோ ஓட்டும் இளம்பெண் !
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டும் 22 வயது இளம்பெண் எல்லம்மா ஐ.ஏ.எஸ் லட்சியக் கனவுடன் தீவிரமாக தயாராகி வருகிறார்.
வறுமை, குடும்பச் சூழ்நிலை காரணமாக 18 வயதில் ஒரு பூ வியபாரியை திருமணம் செய்தார். காலம் செய்த கோலத்தால், கணவரின்றி, இரண்டரை வயது கைக்குழந்தையுடன் தவித்த எல்லம்மா, மைத்துனரின் உதவியுடன் ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டார். மன தைரியத்துடன் வாழ வேண்டுமென்ற உறுதியுடன் இருந்த இவர், ஆட்டோ வாங்க வசதியின்றி, நாள் வாடகைக்கு ஆட்டோவை பெற முயன்றார்.

பெண் என்பதால், அவருக்கு ஆட்டோவை வாடகைக்கு தர மறுத்தனர். இருப்பினும் விடா முயற்சியுடன் போராடி கடைசியில், ஒரு ஆட்டோ மெக்கானிக்கிடம் நாளொன்றுக்கு ரூ.130 வாடகையில் ஆட்டோ எடுத்துள்ளார் எல்லம்மா.
பரபரப்பான பெங்களூரு நகரச் சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆட்டோ ஓட்டும் இவர், ஓய்வு நேரங்களில் விடாமல் படித்துக் கொண்டே இருந்துள்ளார். ஒரே நேரத்தில், பி.யு.சி., தேர்வுக்கும், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கும் தயாராகி வருகிறார். ஆட்டோ சவாரி முடிந்து, ஓய்வு கிடைக்கும்போதெல்லாம், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான புத்தகங்களை படித்து வருகிறார்.
இதுகுறித்து எல்லம்மா கூறுகையில், பெண்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே ஐஏஎஸ் படித்து வெற்றி பெற வேண்டும் என்று வைராக்கியமாக கூறினார். மேலும் ஆட்டோவில் வரும் வாடிக்கையாளர்கள் நல்ல முறையில் நடந்து கொள்கின்றனர். எனது கதையை கேட்கும் அவர்கள் மீட்டருக்கு மேல் ரூ.10 அல்லது ரூ.20 கொடுப்பார்கள் என்றார் எல்லம்மா. விடாமுயற்சி இருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைத்தே தீரும் எல்லம்மாளின் ஐ.ஏ.எஸ் கனவு மெய்ப்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications