யோகேந்திர யாதவ் சிறந்த நண்பர்: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் வெடித்துள்ள மோதல்களை மூடி மறைக்கும் வகையில் போர்க்கொடி தூக்கியுள்ள யோகேந்திர யாதவை தமது சிறந்த நண்பர் என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பில் இருந்து பிரிந்து, ஆம் ஆத்மி என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் அரவிந்த் கேஜ்ரிவால்.
கட்சி தொடங்கிய மிக குறுகிய காலத்திலேயே கடந்த ஆண்டு நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் கணிசமான இடங்களை பெற்று காங்கிரஸ் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைத்தது. ஆனால் 49 நாளில் ஆட்சியை உதறிய அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அது முதல் ஆம் ஆத்மியில் பிரச்சினை வெடித்தது. லோக்சபா தேர்தலில் டெல்லியில் ஒரு இடத்தைக்கூட ஆம் ஆத்மியால் பிடிக்க முடியவில்லை. அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் தோல்வியை தழுவியனர். ஆனால் பஞ்சாப்பில் மட்டுமே அக்கட்சியால் 4 இடங்களை பிடிக்க முடிந்தது.
இதைத்தொடர்ந்து ஷாசியா இல்மி, கேப்டன் கோபிநாத் , உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கட்சியில் இருந்து விலகியதுடன், கட்சி தலைமை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினர்.
மேலும் கட்சியின் முக்கிய தலைவர்களான யோகேந்திர யாதவ் மற்றும் மனிஷ் சிஸோடியா ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு வெடித்தது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், யோகேந்திர யாதவ் தனது சிறந்த நண்பர் என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ் எனது நெருங்கிய நண்பர். அவருடன் நீண்ட ஆலோசனை மேற்கொண்டேன். அவர் சில முக்கிய விவகாரங்களை எழுப்பினார். . அவற்றின் மீது அனைவரும் விரைந்து செயல்படுவோம். கட்சியில் இருந்து விலகிச் சென்ற ஷாசியா இல்மியை திரும்பப் பெற முயற்சிப்போம் என்று கூறியுள்ளார்.