பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடை விதிக்கக் கூடாது: சல்மான் கான்
மும்பை: கலை மற்றும் பொழுதுபோக்கிற்கு எல்லை இல்லை. அதனால் பாகிஸ்தான் நடிகர், நடிகைகளை பாலிவுட்டில் நடிப்பதை தடுத்து நிறுத்த முடியாது என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர், நடிகைகளை பாலிவுட் படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என்ற விவாதம் கிளம்பியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை மும்பையில் நடத்த சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
பாலிவுட் படங்களில் நடித்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பவாத் கான் மற்றும் மாஹிரா கான் ஆகியோரையும் சிவசேனா குறி வைத்துள்ளது.
இது குறித்து சிவசேனாவின் திரைப்பட பிரிவு பொதுச் செயலாளர் சித்ராபத் சேனா கூறுகையில்,
நம் ராணுவ வீரர்களை கொலை செய்யும் அவர்கள் நாட்டு கலைஞர்கள் இங்கு வந்து நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதிக்க முடியும். எதிரிகளுடன் கலாச்சார தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்றார்.
இந்நிலையில் இது குறித்து சல்மான் கான் கூறுகையில்,
கலையையும், அரசியலையும் கலக்கக் கூடாது. ஒரு கதாபாத்திரத்தை பாகிஸ்தான் நடிகர் சிறப்பாக செய்வார் என்று நினைத்தால் அவரை நடிக்க வைக்க யாரும் தடை போடக் கூடாது. பாகிஸ்தானில் உள்ளவர்களில் பலர் பாலிவுட் ரசிகர்கள். தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இந்தியர்கள் பாகிஸ்தானிய நிகழ்ச்சிகள் உள்பட பல நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள். அதனால் கலைக்கும், பொழுதுபோக்கிற்கும் எல்லை இல்லை என்றார்.