திடுதிப்பென லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியான காஷ்மீர் உள்ளூர் கால்பந்து வீரர்!
காஷ்மீர் உள்ளூர் கால்பந்து அணி வீரர் ஒருவர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளார்.
காஷ்மீர்: காஷ்மீரில் உள்ளூர் கால்பந்து அணியின் வீரரான மஜித் இர்ஷாத் கான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியாக மாறியுள்ளார். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் மஜித் இர்ஷாத் கான், இவர் அப்பகுதியில் உள்ள கால்பந்து அணியின் பிரபல வீரர் ஆவார். கடந்த சில நாட்களாக போட்டிகளில் எதிலும் விளையாடாமல், யாருடனும் பேசாமலும் இருந்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. திடீரென இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து காணாமல் போய் இருக்கிறார் இர்ஷாத்.
இந்நிலையில் வீட்டில் இருந்து காணாமல் போன இர்ஷாத், லக்ஷர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளார் என்றும், தனது பெயரை அபு இஸ்மாயில் என மாற்றிக்கொண்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இர்ஷாத்தின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அனந்த்நாக் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இர்ஷாத்தின் இமெயில், பேஸ்புக் கணக்குகளை ஆராய்ந்ததில் இவர் பல மாதங்களாக தீவிரவாத இயக்கத்தினரோடு தொடர்பில் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
புல்வாமா நகரில் உபைத் தாகூர் என்கிற 11-ம் வகுப்பு மாணவர் சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். தற்போது அந்த மாணவரும் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு இருக்கின்றனராம்.