வேறு பெண்ணுடன் திருமணமான பிறகும் இளம்பெண் மீது ஆசைப்பட்ட இளைஞர்.. சம்மதிக்காததால் தீ வைத்து எரிப்பு!
ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த 19 வயது இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே கடந்த மாதம் இதே போன்ற சம்பவம் ஒன்று நடைபெற்றதில் பள்ளிச் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
தற்போது அதே மாதிரி மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் பலத்த தீக்காயமடைந்த இளம்பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகாத உறவை கண்டித்த மனைவி.. முதலைக் கண்ணீர் வடித்து நாடமாடிய கணவர்! கதிகலங்கிய கள்ளக்குறிச்சி!
குற்றங்கள்
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிராக 4,28,278 குற்றங்கள் அரங்கேறியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி பார்த்தால் இந்த குற்றங்கள் சுமார் 26.35% அளவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 107 பெண்கள் மீது ஆசிட் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. 1,580 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர். 15 சிறுமிகள் கடத்தப்பட்டு விற்கப்பட்டுள்ளனர்.
விசாரணை
இவ்வாறு இருக்கையில் நேற்று மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் இருந்த நிலையில் அவர் மீது தாக்குதல் நடத்தி தீ வைக்கப்பட்டுள்ளது. இதில் பலத்த தீக்காயமடைந்த இளம்பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
திருமணத்திற்கு மறுப்பு
இச்சம்பவம் குறித்து அவர்கள் கூறுகையில், "கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கும் ராஜேஷ் ராவத் எனும் இளைஞனுக்கும் நட்பு இருந்து வந்துள்ளது. இவ்வாறு இருக்கையில், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ராவத் இளம்பெண்ணை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ராவத்துக்கு ஏற்கெனவே திருமணமாகியுள்ளது. இதன் காரணமாக இளம்பெண்ணின் வீட்டிலும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
வாக்குமூலம்
ஆனாலும் இளம்பெண்ணை ராவத் தொடர்ந்து பின்தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தொல்லை தாங்காமல் கடுமையான சொற்களால் இளம்பெண் ராவத்தை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராவத், இளம்பெண் வீட்டில் தனியாக இருக்கும்போது அவரை தாக்கி தீ வைத்துள்ளார். இதில் இளம்பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது." என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இளம்பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்காக மாவட்ட நிர்வாகம் ரூ.1 லட்சத்தை வழங்கியுள்ளது.
கைது
இளம்பெண் அளித்த வாக்குமூலத்தில், கடந்த மாதம் சிறுமி ஒருவர் தீ வைத்து கொலை செய்யப்பட்டதைப் போல என்னையும் கொன்றுவிடுவதாக ராவத் மிரட்டியதாக தெரியவந்துள்ளது. தற்போது தீ வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் இதே போல இளைஞர் ஒருவர் சிறுமியை காதலிக்க வலியுறுத்தி பின்தொடர்ந்துள்ளார். சிறுமி மறுக்கவே இளைஞன் சிறுமியை தீ வைத்து எரித்துள்ளார். இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.