அரசியலில் அம்மா, சகோதரியை ஒதுக்கி வைக்கும் ஜெகன் மோகன் ரெட்டி!
ஹைதராபாத்: தம்மை தவிர தீவிர அரசியலில் தமது குடும்பத்தினர் யாரும் ஈடுபட தேவையில்லை என்ற முடிவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஒன்றரை ஆண்டுகாலத்துக்கும் மேலாக ஜெகன் மோகன் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது கட்சி தொண்டர்கள் சோர்வடையாமல் இருக்க ஜெகனின் சகோதரி ஷர்மிளா மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார்.
தொண்டர்களை பாதயாத்திரையாக சென்று நேரில் சந்தித்து பேசினார். சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் வரை அவர் பயணம் செய்தார். அவர் சென்ற இடமெல்லாம் பெரும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜெகன் வெளியே வராவிட்டாலும் லோக்சபா தேர்தலில் தீர்மானிக்க கூடிய சக்திகளில் ஒருவராக ஷர்மிளா உருவெடுப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜெகன் விடுதலையானதைத் தொடர்ந்து ஷர்மிளா எந்த ஒரு அரசியல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. ஷர்மிளாவோ, அம்மா விஜயாம்மாவோ அரசியல் நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருக்க வேண்டும் என்பதுதான் ஜெகனின் விருப்பமாம். ஷர்மிளாவோ கடப்பா லோக்சபா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஜெகன் வேறொரு உறவினருக்கு போட்டியிட வாய்ப்பு தருவதாக தாம் உறுதி அளித்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி அண்மையில் தேசிய தலைவர்களை ஜெகன் மோகன் சந்திக்க சென்ற போதும்கூட தமது குடும்பத்தினர் யாரையும் அவர் அழைத்துச் செல்லவில்லை. இதேபோல ஜெகனின் உறவினர் சுப்பா ரெட்டியும் ஓரம்கட்டப்பட்டிருக்கிறார்.
அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக பல கோடி சுருட்டிவிட்டதாக எழுந்த புகாரால் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்தில் கலகக் குரல் எழக் கூடும் என்றும்கூட கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications