நேபாளத்தில் பஸ் விபத்தில் 16 பேர் பலி.. 11 பேர் இந்தியர்கள்
காத்மாண்டு: நேபாளத்தில் நடந்த பஸ் விபத்தில் 11 இந்தியர்கள் உள்பட 16 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்.
மேற்கு நேபாளத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. அங்குள்ள ஆற்றில் பஸ் தடுமாறி விழுந்ததில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. பஸ்சில் இருந்த அனைவருமே புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த யாத்ரீகர்கள் ஆவர். இவர்களில் இந்தியர்கள் 11 பேர் என்று கூறப்படுகிறது.

பியூதான் மாவட்டத்திலிருந்து பஸ் திரும்பிக் கொண்டிருந்தபோது மலைச் சாலையில் திடீரென தடுமாறி கீழே உள்ள ஆற்றில் விழுந்துள்ளது. விபத்து நடந்த இடம் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. அவர்களில் பலரும் உ.பி. மாநிலம் பல்ராம்பூர், கோண்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
ஸ்வர்கத்வாரி கோவிலுக்குப் போய் விட்டு கபிலவஸ்துவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது. பஸ்சில் 60 பேர் இருந்ததாக தெரிகிறது.
மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை மீட்கப்பட்டுள்ள உடல்களில் 7 பேர் பெண்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications