துருக்கியில் இராணுவம் - போலீசார் இடையே மோதல்: பலி எண்ணிக்கை 265 ஆக உயர்வு; 1,440 பேர் படுகாயம்
அங்காரா: துருக்கியில் ராணுவ புரட்சிக்கு முயன்ற ராணுவத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில் பலியானோர் எண்ணிக்கை 265 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை புரட்சியில் ஈடுபட்டதாக 2,839 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கி நாட்டில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அகற்றிவிட்டு அரசை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. துருக்கி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. அங்காரா நகரில் உள்ள விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் இராணுவத்தினர் குவிந்தனர்.
இதனையடுத்து, அங்காரா நகரில் ராணுவத்துக்கும் அரசு தரப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
துருக்கி நாடாளுமன்றம் மீது இராணுவத்தினர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்கள் நடத்தினர். இஸ்தான்புல் நகரில் உள்ள தஸ்கின் சதுக்கம் அருகே போலீசார் மற்றும் இராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
அங்காராவில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றின் மீது இராணுவத்தினர் ஹெலிகாப்டரில் நடத்திய தாக்குதலில் 17 போலீசார் உயிரிழந்துள்ளனர். இதுவரையிலான மோதல்களில் மொத்தம் 265 பேர் பலியாகி உள்ளனர். 1,440 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புரட்சியில் ஈடுபட்ட குற்றத்துக்காக 2,839 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் பினாலி எல்டிரிம் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், ராணுவ புரட்சியை கட்டுப்படுத்த களத்தில் இறங்கிய பொதுமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இது போன்ற கிளர்ச்சிகள் தொடர்கதையாகி விடாமல் பார்த்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் பிரதமார் பினாலி எல்டிரிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.