மலேசியாவில் “உலக கொங்கு தமிழர் மாநாடு”.... பிரதமர் நஜீப் ரசாக் பங்கேற்பு
கோலாலம்பூர்: மலேசியாவில் உலக கொங்கு தமிழர் மாநாடு வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த கொங்கு தமிழர் மாநாட்டில் மலேசியாவின் பிரதமர் நஜீப் ரசாக் பங்கேற்று சிறப்பித்தார்.
மலேசிய நாமக்கல் நலனபிவிருத்தி மன்றத்தின் 60 ஆண்டு நிறைவு வைரவிழாவோடு "பண்பாடு காப்போம்" என்ற தலைப்பில் கோலாலம்பூர் நெகரா அரங்கில் கடந்த 23-ந் தேதி உலக கொங்கு தமிழர்கள் மாநாடு நடைபெற்றது. கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் முன்முயற்சியில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள கொங்கு தமிழர்கள் ஏராளமானோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
தமிழகத்தில் இருந்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிங்கப்பூர், கனடா, லண்டன், அமெரிக்கா, துபாய், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் கொங்கு தமிழர்கள் இதில் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக நஜீப் ரசாக்
உலக கொங்கு தமிழர்கள் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக மலேசிய நாட்டின் பிரதமர் நஜீப் ரசாக் கலந்து கொண்டார். அவர் உலக கொங்கு மாநாட்டின் சின்னத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

சரிசமமான சலுகை
அவர் தம்முடைய உரையில், மலேசியாவில் அனைத்து இனத்தினருக்கும் சரிசமமான சலுகையை அரசு வழங்கி வருகிறது. உலக கொங்கு தமிழ் மாநாடு முதல் முறையாக வெளிநாட்டில் அதுவும் மலேசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவுக்கு பெருமை
இது மலேசியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இது போன்ற மாநாடுகள் இந்தியா-மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்துவதுடன், வணிக வாய்ப்புகளும் மேம்படும் என்றார்.

ரசாக் பிறந்த நாள் -கலை நிகழ்வுகள்
இம்மாநாட்டில் பிரதமர் நஜீப் ரசாக்கின் பிறந்தநாள் விழா கேக்வெட்டியும், அவருக்கு நினைவு பரிசு வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழரின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளையும் அவர் கண்டு களித்தார்.

ஈ.ஆர். ஈஸ்வரன் வரவேற்பு
முன்னதாக நஜீப் ரசாக்கை வரவேற்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் பேசியதாவது: இம்மாநாட்டிற்கு அதிகாரபூர்வ வருகை தந்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறோம். மலேசியாவில் வாழுகின்ற இந்தியர்களுக்கும் குறிப்பாக தமிழர்களுக்கும் உறுதுணையாக உள்ளதற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கொங்கு தமிழரின் தொழிற்துறையினர் சந்திப்பு
ஜூலை 24 -ஆம் தேதி உலக கொங்கு தமிழர்களின் "தொழிற்துறையினர் சந்திப்பு" கலந்துரையாடல் ("GLOBAL KONGU ENTREPRENEURS MEET") நிகழ்வை ஏற்பாடு செய்து கொடுத்த மலேசிய அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்விழாவில் இந்தியாவுக்கான சிறப்பு தூதர் எஸ்.சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்ததற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வெவ்வேறு நாடுகளில்...
இந்த நிகழ்வு இனி வரும் காலங்களில் ஒவ்வொரு நாடுகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. என்னோடு இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இந்த மாநாடு வெற்றி பெற உழைத்த மலேசியா நாமக்கல் மன்றத்தின் தலைவர் டத்தோ.சுப்பிரமணி, டேன்ஸ்ரீ.கேவியாஸ், பிரகதீஷ் உள்ளிட்ட விழாக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications