கால்பந்தாட்ட போட்டியின்போது குர்ஆனை கிழித்தெறிந்த 2 பெண்களுக்கு அபராதம்
லண்டன்: இங்கிலாந்தில் கால்பந்தாட்ட போட்டியின்போது குர்ஆனின் பக்கங்களை கிழித்து எறிந்ததோடு, முஸ்லீம்களுக்கு எதிராக கோஷமிட்ட 2 பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் பகுதியில் உள்ள புனித ஆன்ட்ரூஸ் விளையாட்டரங்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி பிர்மிங்ஹாம் கால்பந்தாட்ட கிளப் மற்றும் மிடில்ஸ்போரோ அணிகள் மோதிய கால்பந்தாட்ட போட்டி நடந்தது.
அப்போது ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த பிர்மிங்ஹாம் அணி ஆதரவாளரான ஜூலி பிலிப்ஸ்(50) தனது கைப்பையில் இருந்து முஸ்லீம்களின் புனிதநூலான குர்ஆனை எடுத்து அதன் பக்கங்களை கிழித்து அரங்கில் இருந்தவர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் அனைவரும் கிழிக்கப்பட்ட குர்ஆனின் பக்கங்களை காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.
ஜூலியுடன் சேர்ந்து ஜெம்மா பார்கின்(18) என்ற பெண்ணும் முஸ்லீம்களை கத்தியால் குத்திக் கொல்ல வேண்டும் என்று கோஷமிட்டுள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜூலியிடம் விசாரித்தபோது தன்னிடம் யாரோ குர்ஆனை கொடுத்ததாகவும், அது புனிதநூல் என்று தனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த பிர்மிங்ஹாம் நீதிமன்றம் ஜூலி, எம்மா ஆகியோருக்கு அபராதம் விதித்துள்ளது. ஜூலிக்கு ரூ. 74 ஆயிரத்து 148ம், எம்மாவுக்கு ரூ. 62 ஆயிரத்து 960ம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.