முன்பு மாஷா அமினி.. இப்போ ஹடிஸ் நஜாஃபி! சுட்டுக் கொன்ற ஈரான்! ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தால் பதற்றம்
தெஹ்ரான்: முறையாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி ஈரானில் 22 வயது இளம் பெண் ஒருவர் மீது அந்நாட்டு காவல்துறை நடத்திய தாக்குதலில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. போராட்டத்தில் பாதுகாப்புத்துறையினர் நடத்திய தாக்குதல் வன்முறையாக வெடித்த நிலையில் இதுவரை சுமார் 50க்கும் அதிகமானோர் இதில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஹடிஸ் நஜாஃபி, இந்த போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஓபிஎஸ் கையில் 3+1 ஆப்ஷன்கள்.. டெல்லி கைவிட்டாலும்.. இருக்கு மெகா அஸ்திரம்.. ரிப்போர்ட் லீக் ஆகுமாம்!
மாஷா அமினி
கடந்த 15ம் தேதி குர்திஸ்தானை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) எனும் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பரிசோதனை செய்த கலாச்சார காவல் குழுவினர், ஹிஜாப்பை சரியாக அணியவில்லையென்று மாஷா அமினி மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அமினியை அங்கும் தாக்கியுள்ளனர்.
போராட்டம்
இதனால் மயக்கமடைந்த மாஷா அமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் கோமாவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 17ம் தேதி உயிரிழந்துவிட்டார். அமினியின் சொந்த ஊரான சாகேஸ் பகுதியில் அமினியின் கல்லறை அருகே திரளான அளவில் திரண்ட பெண்கள் ஹிஜாபை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே நாடு முழுவதும் ஹிஜாப் கட்டாயம் எனும் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படுகொலை சம்பவம் இப்போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
மோதல்
கடந்த 18ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் காட்டு தீயை போல நாடு முழுவதும் பரவியுள்ளது. சுமார் 50 நகரங்களில் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. அதேபோல போராட்டக்காரர்களின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
சங்கம் அமைக்கும் உரிமை
ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் ஈரானை கடந்து கனடா வரை பரவியுள்ள நிலையில், ஐநா பொதுச் செயலாளர், "அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது தங்களது பலத்தை ஈரான் பாதுகாப்புப் படையினர் காட்டக்கூடாது. இவ்வாறு தேவையற்ற அதீத அடக்குமுறையின் மூலம் ஏற்படும் வன்முறை குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம். கருத்து சுதந்திரம், சங்கம் அமைத்து செயல்படும் உரிமை ஆகியவற்றை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்று கூறினார்.
மனித உரிமை
மேலும், "போராட்டம் தீவிரமடைவதை தடுக்க அனைவரும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, பிற மனித உரிமை மீறல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்க பயனுள்ள நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு ஈரானிய அதிகாரிகளை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது" என்று ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் நியூயார்க்கில் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
உயிரிழப்பு
இவ்வாறு இருக்கையில், ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே நடைபெற்ற ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருந்த டிக்டிாக் பிரபலமான 20 வயது ஹடிஸ் நஜாஃபி, பாதுகாப்புப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். ஹடிஸின் கழுத்து, முகம், வயிறு, இதயம் ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்துள்ளது. உலக நாடுகள் முதல் ஐநா தலைவர் வரை அனைவரும் ஈரான் பாதுகாப்புப்படையினர் வன்முறையை பிரயோகிக்கக்கூடாது என கேட்டுக்கொண்ட நிலையில், தொடர்ந்து இதுபோன்று நிகழும் உயிரிழப்புகள் உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.