நிற்காத நடுக்கம்.. 30 முறை அதிர்ந்த பூமி! உருக்குலைந்த துருக்கி, சிரியா - அதென்ன “ஆஃப்டர் ஷாக்?”
துருக்கி மற்றும் சிரியாவில் 30 முறை அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர்.
அன்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டில் 30 முறை அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர். தொடர் நில அதிர்வுகளால் மீட்புப்பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
தெற்கு மத்திய துருக்கி மற்றும் வட சிரியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 என்ற ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவான நிலையில், அடுத்த நிலநடுக்கம் 7.5 என்ற ரிக்டர் அளவில் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவை சேர்ந்த 1,600 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
30 முறை நில அதிர்வு
சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 30 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்து இருக்கிறது. ரிக்டரில் 4 என்ற அளவில் இந்த நில அதிர்வுகள் பதிவானதாக அமெரிக்க புவியியல் நிலையம் கூறியுள்ளது. இந்த தொடர் நில அதிர்வுகளால் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆஃப்டர் ஷாக்
ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அதன் தொடர்ச்சியாக லேசான நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்படுவது வழக்கம். இதன் பெயர் ஆஃப்டர் ஷாக் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இது சில மணி நேரங்கள், நில நாட்கள், சில வாரங்கள், சில மாதங்கள், சில ஆண்டுகள் வரையிலும் தொடரும் என்று கூறப்படுகிறது.
இடிந்து விழுந்த கட்டிடங்கள்
ஆனால், துருக்கியில் இந்த ஆஃப்டர் ஷாக் அதிகளவில் ஏற்பட்டதுடன் அதன் சக்தியும் தீவிரமாக இருந்து உள்ளதால் பாதிப்பு மேலும் மோசமடைந்து இருக்கிறது. அத்துடன் நிலநடுக்கத்தால் சேதமடைந்த, வெடிப்புகள் ஏற்பட்ட கட்டிடங்கள் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த 30 நில அதிர்வுகளால் இடிந்து விழுந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
10 கிலோ மீட்டர் ஆழம்
இந்த ஆப்டர் ஷாக் என்பது பூமிக்கு அடியில் வெறும் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்படக்கூடியது. இது நிலநடுக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை மேலும் மோசமாக்கும். முதலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பூமிக்கும் அடியில் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. குறைவான ஆழத்தில் ஏற்படும் ஆப்டர் ஷாக் நில அதிர்வுகளால் குறிப்பிட்ட இடத்தில் பாதிப்புகள் மேலும் மோசமடையும் என்று கூறப்படுகிறது.