ரஷ்ய மனநல மருத்துவமனையில் தீ; 37 பேர் பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் மனநல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 37 பேர் பலியாகினர்.
ரஷ்யாவின் நோவ்கோரோட் மாகாணத்தில் லூகா என்ற ஊரில் மனநோயாளிகளுக்கான மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு 60-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்தது. அது பயங்கரமாக எரிந்து அடியோடு தரைமட்டமானது.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு சிலரை மீட்டனர். இருப்பினும் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கி 37 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் மருத்துவ ஊழியர் ஒருவர் ஆவார். மேலும் 27 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
ரஷ்யாவில் இதுபோன்ற மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்த ஆண்டில் நடைபெற்ற 4-வது பெரிய விபத்து இதுவாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி ராமென்ஸ்கை என்ற இடத்திலுள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 2 நர்சுகள் உள்பட 38 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications