காதலருடன் ஓடிப்போன தங்கை.. விருந்து கொடுப்பதாக அழைத்து சரமாரியாக குத்திக்கொன்ற 'பாசக்கார' அண்ணன்!
பாகிஸ்தானில் காதலருடன் ஓடிப்போன தங்கையை விருந்து தருவதாக அழைத்து வந்து உடன் பிறந்த அண்ணனே குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாகூர்: பாகிஸ்தானில் காதலருடன் ஓடிப்போன தங்கையை விருந்து தருவதாக அழைத்து வந்து உடன் பிறந்த அண்ணனே குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக கவுர கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
காதல் திருமணம் செய்யும் பெண்களை பெற்றோரும் உடன்பிறந்த சகோதரர்களும் கொலை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காதலருடன் சென்ற தங்கையை அண்ணனே குத்தி கொலை செய்துள்ளார்.

காதலுக்கு மறுப்பு
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள ஷெராகோட் பகுதியை சேர்ந்தவர் நசியா என்ற இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் நசியாவின் காதலை ஏற்க அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர்.

மாயமான நசியா
இதையடுத்து நசியா திடீரென ஒரு நாள் வீட்டில் இருந்து மாயமானார். நசியா காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

விருந்து கொடுப்பதாக..
இந்நிலையில் நசியா தனது காதலருடன் இருப்பது குறித்து நசியாவின் சகோதரர் இஷாக்குக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நசியா இருக்கும் இடத்துக்கு சென்ற அவரது குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி விருந்து கொடுப்பதாக வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

தடல்புடல் விருந்து
மேலும் இதுகுறித்து போலீசாரிடமும் தெரிவித்து, தாங்கள் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றனர். வீட்டிற்கு வந்த நசியாவிற்கு தடல்புடலாக விருந்து கொடுத்தனர்.

கத்தியால்குத்திய அண்ணன்
இதைத்தொடர்ந்து நசியாவுக்கும், அவரது சகோதரர் இஷாக்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த காதலனுடன் ஓடிப்போய் குடும்ப மானத்தை வாங்கி விட்டதாக கூறி அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

துடிதுடித்து உயிரிழந்த தங்கை
இதில் படுகாயமடைந்த நசியா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இஷாக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலருடன் ஓடிப்போன தங்கையை பெற்றோர் முன்னிலையில் அண்ணனே குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications