ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதியை மிஞ்சிய ‘சார்லி ஹன்னா'.. காதலியின் ஆசையை நிறைவேற்றிய காதலன்!
அங்காரா: இந்த உலகம் அன்பால் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒவ்வொரு உயிரும் சக உயிர்கள் மீது கொண்டுள்ள நேசமே இவ்வுலகத்தை உயிர்ப்புடன் இயக்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.
இதனை அவ்வப்போது நடக்கும் சில நிகழ்வுகள் உறுதி செய்து வருகிறது. அந்த வகையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது காதலியின் கனவை நிஜமாக்கி காதலர்கள் மேற்கொண்ட பயணம் ஒன்று இன்ஸ்டாகிராமில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் காதலி புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில் இந்த காதல் ஜோடி துருக்கியில் சாகச பயணத்தை மேற்கொண்டிருக்கிறது.

காதல்
ஹன்னா-சார்லி ஜோடி சமீப நாட்களாக காதிலித்து வந்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் ஹன்னாவுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைய துவங்கியுள்ளது. கோடைக்காலத்தின் காட்டுப் பயிர் போல ஹன்னா மெல்ல நலிவடைய தொடங்கியுள்ளார். ஆனால் காதலன் சார்லி அவளுக்கு நம்பிக்கை கொடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஹன்னாவுக்கு பெற்றோர், நண்பர்கள், காதலன், உறவினர்கள் என எல்ல பக்கமும் இருந்தும் நம்பிக்கை கரங்கள் நீண்டன.

ஆசை
ஒரு நாள் நோயின் பிடி இறுகி இருந்த தருணத்தில் சார்லியை நெருக்கமாக அழைத்த ஹன்னா, தனது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது, துருக்கியின் கப்படோசியாவில் உள்ள பலூன்களை பார்க்க வேண்டும் என்பதே அவளின் ஆசை. நோயின் வலி உயிரின் நாடியை உச்ச ஸ்தாதியில் மீட்டிக்கொண்டிருக்க, அவள் கூறியதை கேட்டு சார்லி உணர்ச்சி பெருக்கெடுக்காமல் பொறுமையாக "நீ கீமோதெரபி சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துக்கொள்ள ஒத்துழைப்பு கொடுத்தால் நாம் நிச்சயம் அங்கு போகலாம்" என்று உறுதியளித்தான்.

பயணம்
எதிர்பார்த்தபடி சிகிச்சை வெற்றிகரமாக முடிய, இருவரும் துருக்கியின் கப்படோசியாவில் உள்ள பலூன்களை பார்க்க ஒன்றாக புறப்பட்டுள்ளனர். அங்கு சென்ற பின்னர் சார்லி ஹன்னாவுக்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்திருந்திருக்கிறார். அதாவது வெறுமனே பலூன்களை பார்ப்பது மட்டுமல்லாது அந்த பலூன்களோடு பயணிக்கவும் அவன் ஏற்பாடு செய்திருக்கிறான். இதனை சற்றும் எதிர்பார்த்திராத ஹன்னா துள்ளி குதித்துள்ளார். தற்போது இது தொடர்பான படங்களையும், வீடியோக்களையும் ஹன்னா சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

யதார்த்தம்
இதை உலகம் முழுவதும் உள்ள இணையவாசிகள் பரவலாக பகிர்ந்து ஹன்னாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சர்வதேச மக்கள் தொகையில் ஆண்டுக்கு சராசரியாக 1 கோடி பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மார்பகம், நுரையீரல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள்தான் பெருமளவில் மக்களை பாதிக்கிறது.
மனிதர்களின் சராசரி வாழ்நாள் சுமார் 6,00,000 மணி நேரங்கள் தான். இந்த 6 லட்சம் மணி நேரத்திலும் எப்போது என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. ஆனால் இருக்கும் மட்டும் நம்மோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாய் வைத்திருப்போம்.












Click it and Unblock the Notifications