பெரும் போராட்டம்.. மாணவிகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஆப்கன் மாணவர்கள்.. கையை பிசையும் தாலிபான்கள்
காபூல்: ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் மீண்டும் படிப்பை தொடர அனுமதிக்கப்படும் வரை நாங்களும் வகுப்புக்குள் செல்ல மாட்டோம் என மாணவர்கள் போராட்டத்தில் குதித்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மாணவர்களின் இந்தப் போராட்டம் தாலிபான் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உயர்நிலைக் குழுக்களை ஆப்கானிஸ்தான் அரசு நியமித்துள்ளது.
எனினும், பெண்கள் கல்லூரிகளுக்குள் நுழைந்தால்தான் நாங்களும் கல்லூரிக்கு செல்வோம் என அந்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மாறிப்போன தலையெழுத்து
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வந்த அமெரிக்கப் படையினர் கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் தங்கள் நாட்டுக்கு திரும்பிச் சென்றனர். இதனால் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த ஜனநாயக ரீதியிலான ஆட்சி கவிழ்ந்து, தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு அமைந்தது. தாலிபான் ஆட்சி அமைந்ததும், ஆப்கானிஸ்தானில் பெண்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அந்நாட்டு மக்களும், சர்வேதச ஊடகங்களும் அச்சம் தெரிவித்தன. ஆனால், பெண்கள் மீது எந்த தடையும் விதிக்கப்படாது; அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுவார்கள் என தாலிபான்கள் தெரிவித்தனர்.

வேலையை காட்ட தொடங்கிய தாலிபான்கள்
ஆனால், ஆட்சிக்கு வந்ததுமே தாலிபான்கள் தங்கள் வேலையை காட்டத் தொடங்கினர். முதலில், பெண்கள் கட்டாயம் பர்தா அணிந்துதான் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற உத்தரவை தாலிபான் அரசு பிறப்பித்தது. பின்னர், பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு, பெண் பிள்ளைகள் 5-ம் வகுப்புக்கு மேல் படிக்கக்கூடாது என தாலிபான்கள் தடை விதித்தனர். இந்தக் கடைசி உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே, அதனை ஆப்கன் அரசு வாபஸ் வாங்கியது. எனினும், பள்ளிகளில் மாணவர்கள் - மாணவிகளுக்கு இடையே திரைச்சீலை கட்ட உத்தரவிடப்பட்டது.

கல்லூரி செல்ல தடை
இதுபோன்ற சூழலில், கடந்த வாரம் ஒரு புதிய உத்தரவை ஆப்கன் அரசு விதித்தது. அதன்படி, தற்போது கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வி செல்லும் பெண்கள் உடனடியாக தங்கள் படிப்பை கைவிட வேண்டும் என்றும், இனி பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு தடைவிதிக்கப்படுகிறது எனவும் அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் எழுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல், பல நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

மாணவர்கள் போராட்டம் - நெருக்கடி
இதனிடையே, தாலிபான்களின் இந்த உத்தரவால் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இருந்து பெண்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், தாலிபான்களின் இந்த உத்தரவை கண்டித்து ஆப்கானிஸ்தான் முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் போராட்டத்தில் குதித்துள்ளனர். பெண்கள் மீண்டும் கல்லூரிகளில் அனுமதிக்கப்படும் வரை நாங்கள் வகுப்புகளுக்குள் செல்ல மாட்டோம் என மாணவர்கள் கூறியுள்ளனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்தை தாலிபான்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே பொருளாதாரத்தில் சரிந்து வரும் ஆப்கானிஸ்தானில், மாணவர்களும் படிப்பை கைவிட்டுவிட்டால் பெரும் பிரச்சினை ஏற்படும் என தாலிபான்கள் உணர்ந்திருக்கின்றனர். எனவே, மணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உயர்நிலைக் குழுக்களை ஆப்கன் அரசு அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications