ஹிஜாப் விதியை மீறிய மாணவிகள்! ஆப்கனில் பள்ளியை பூட்டிய தாலிபான்கள்! ஆசிரியர்களை நீக்கி அதிரடி உத்தரவு
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கும் நிலையில் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் மாணவிகள் சரியாக ஹிஜாப் அணியாததால் அந்த பள்ளியை தாலிபான் அரசு மூடியது. மேலும் ஆசிரியர்களையும் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு வெளியேறியது. இதையடுத்து தாலிபான்கள் உள்நாட்டு போரை துவக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.
2021 ஆகஸ்டு முதல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
ஷாக்! தாடி வைக்கவில்லை என்றால் வேலை காலி! விதிகளை மீறினால் தலை காலி! ஆப்கான் தாலிபான்கள் உத்தரவு..!
பெண்களுக்கான கட்டுப்பாடுகள்
விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க தடை, பூங்காக்களிலும் ஆண், பெண்கள் ஒரே நேரத்தில் செல்லக்கூடாது, பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது. தனியாக வெளியே நடமாடக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. சமீபத்தில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தாடியை ஷேவ் செய்ய கூடாது. பைஜாமா, ஜிப்பா அணிந்து பணி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கட்டுப்பாடுகள்
மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆப்கனில் தற்போது 7ம் வகுப்பு வரை மட்டும் மாணவிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்பிறகு மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. திறக்கப்பட்ட வகுப்புகளிலும் மாணவ-மாணவிகள் தனித்தனியே பாடம் கற்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ‛டை' அணியக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு பூட்டு
இந்நிலையில் தான் பல்க் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் ஹிஜாப் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹிஜாப் விதிகளை மீறியதாக அந்த பள்ளியை தாலிபான்கள் மூடியதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய உடை கட்டுப்பாடுகளை கண்காணிக்க கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் புகாரை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகளை பின்பற்றாத ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அவர்களிடம் விளக்கம் எதுவும் கேட்கப்படாத நிலையில் இந்த நீக்க உத்தரவு செயல்படுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகள் எதிர்ப்பு
ஆப்கானிஸ்தானில் மதத்தின் அடிப்படையில் பெண்கள் உள்பட அனைவருக்கும் தாலிபான் அரசு கடும் கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும், பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. இருப்பினும் தாலிபான்கள் காதில் வாங்கி கொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.