அபுதாபியில் அய்மான் சங்கத்தில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி
அபுதாபியில் உள்ள அய்மான் சங்கத்தில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அபுதாபி: அமீரகத் தலைநகர் அபுதாபி வந்த டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி தாளாளர் வி.எம். ஜபருல்லா கான், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜெ.அபுபக்கர் சித்திக், ஏ.எஸ். நசீர் கான், முதல்வர் திருமங்கலம் முனைவர் அப்பாஸ் மந்திரி, பேராசிரியர்கள் நாகர்கோவில் முனைவர் இப்ராஹிம், முதுகுளத்தூர் அபுபக்கர் சித்திக் உள்ளிட்டோருக்கு அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி செட்டிநாடு உணவகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
செட்டிநாடு உணவக அரங்கில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத்தின் மூத்த தலைவர் ஜே ஷம்சுதீன் தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார்.துவக்கமாக திருக்குர்ஆனின் வேத வசங்னகளை காயல் ஷேக் ஹமீது ஒதி துவக்கி வைத்தார். பொதுச் செயலாளர் காயல் எஸ் ஏ சி ஹமீது அறிமுக உரையாற்றினார். துணைப் பொதுச் செயலாளர் லால்பேட்டை ஏ எஸ் அப்துல் ரஹ்மான் ரப்பானி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
வருகை தந்த கல்லூரி நிர்வாகிகளுக்கு அய்மான் செயலாளர்கள் காயல் அன்சாரி, லால்பேட்டை அப்பாஸ், கொள்ளுமேடு ஹாரிஸ், ஆடுதுறை அப்துல் காதர், செயற்குழு உறுப்பினர்கள் பேட்டை ஜாபர் மற்றும் பூந்தை ஹாஜா ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் இப்ராஹிம் எழுதிய சீட்லெஸ் பூக்கள் என்ற புத்தகம் அய்மான் பொருளாளர் கீழை ஜமாலுத்தீன் அவர்களால் வெளியிடப் பட்டது. முதல் பிரதியை அபுதாபி தமிழ்ச் சங்கத் தலைவர் செங்கோட்டை ரெஜினால்டு, ஈடிஏ மெல்கோ துணைப் பொது மேலாளர் காதர் மொகிதீன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்.
வளைகுடா வாசகர்களின் நலன் கருதி குவைத்தில் இருந்து வெளிவரும் தங்கம் மாத இதழை அதன் ஆசிரியர் த.ஷேக் மைதீன் வெளியிட்டார். முத்தாய்ப்பாக கல்லூரியின் முன்னாள் மாணவர் முதுவை ஹசன் அஹமது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார். கல்லூரியில் ஆரம்ப காலத்தில் பணியாற்றிய காவலாளி முதல் முதல்வர் மற்றும் நிர்வாகக்குழுவினர் பற்றிய அனைத்து விபரங்களையும் கொடுத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீரகத்தின் மூத்த செய்தியாளர் முதுவை ஹிதாயத்திற்கு அய்மான் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தங்கம் மாத இதழ் ஆசிரியர் மைதீன் அவர்களுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழை அல்லா பக்ஷ், லால்பேட்டை இஸ்மாயில், கீழை தவ்பீக் ஆகியோர் செய்திருந்தனர். இறுதியாக அய்மான் நிர்வாகி லால்பேட்டை சல்மான் நன்றி கூறினார்.