காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி.. முயற்சியை முன்னெடுத்த இந்தியா! நெதன்யாகுவுடன் அஜித் தோவல் ஆலோசனை
டெல் அவிவ்: இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் 30000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், உயிருடன் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
பாலஸ்தீனத்திற்கு வரலாறு நெடுகிலும் இந்தியா தனது ஆதரவை தெரிவித்து வந்திருக்கிறது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம், பாலஸ்தீனத்தை விட இஸ்ரேலுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. இந்த விஷயம் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து இஸ்ரேல் பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் வசம் இருக்கும் பணய கைதிகளை விடுவிப்பது, மனிதாபிமான உதவி உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையின்போது பேசப்பட்டிருக்கிறது. இதனையடுத்து விரைவில் இந்தியா, பாலஸ்தீன மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போர் தொடரும் என்று கூறியுள்ளார். இதற்கு அமெரிக்காவும் துணை போயுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹாலிவுட் திரைப்படத்துறையை சேர்ந்த சுமார் 400 பேர் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் பிரபலங்கள் சிவப்பு நிற பேட்சை அணிந்து போர் நிறுத்தத்தை வலியுறுத்தியிருந்தனர்.
ஆனாலும், தற்போது வரை பைடன் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை ஏதும் வெளியிடவில்லை. இந்த போரில் இதுவரை 30,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும் என்பது கவனிக்கத்தக்கது. தற்போது காசாவில் பஞ்சம் உருவாகியுள்ளது. பசியால் உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையை உடனடியாக மாற்ற போர் நிறுத்தம்தான் தீர்வு என்றும் ஐநா வலியுறுத்தியுள்ளது.
போர் நிறுத்தம் குறித்த தீர்மானங்களை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா கொண்டு வரும்போதெல்லாம், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை தள்ளுபடி செய்து வருகிறது. இப்படி இருக்கையில் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா முன்வந்திருப்பது உலக நாடுகளிடையே கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications