அல் கொய்தாவின் திட்டத்தை திருடி மும்பையை தாக்கிய லஷ்கர் இ தொய்பா
இஸ்லாமாபாத்: 26/11 தாக்குதல் பாணியில் ஐரோப்பாவில் தாக்குதல் நடத்த அல் கொய்தா திட்டமிட்டு அதன் தலைவர் ஒசாமா பின் லேடனிடம் அனுமதி கேட்டுள்ளது. இந்த விவரம் அமெரிக்காவின் ப்ருக்ளின் நீதிமன்றத்தில் 28 வயது பாகிஸ்தான் தீவிரவாதி ஆபித் நஸீருக்கு எதிராக நடந்து வரும் வழக்கு விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.
நஸீர் நியூயார்க் நகரில் உள்ள சப்வேயில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
26/11 அன்று மும்பையை தாக்க அல் கொய்தா தான் திட்டமிட்டது. ஆனால் அதன் திட்டத்தை திருடிய ஐஎஸ்ஐ அதை லக்ஷ்கர் இ தொய்பாவிடம் கொடுத்துவிட்டது.
26/11 யாருடைய திட்டம்?
26/11 தாக்குதல் நடத்த திட்டமிட்டது அல் கொய்தாவின் தலைவர் இல்யாஸ் காஷ்மிரி. அல் கொய்தாவின் போர் படையின் தலைவர் இல்யாஸ் காஷ்மிரி. 26/11 தாக்குதலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் மீது போர் தொடுக்க காஷ்மிரி திட்டமிட்டார். இந்தியாவில் கால்பதிக்க நேரமாகிவிட்டது என்று அவர் நினைத்துள்ளார்.
மும்பை தாக்குதல்
இந்தியாவில் வலுவான நெட்வொர்க் அமைக்க இந்திய மண்ணில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று நினைத்தார் காஷ்மிரி. அதனால் தான் மும்பையில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டினார். மும்பையில் தாக்குதல் நடத்த காஷ்மிரி 25 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கத் துவங்கினார். அந்நேரம் அல் கொய்தா பக்கம் சாய்ந்த டேவிட் ஹெட்லியுடன் காஷ்மிரி தொடர்பில் இருந்தார். பாகிஸ்தான் வந்தபோது ஹெட்லியுடன் மும்பை தாக்குதல் குறித்து காஷ்மிரியுடன் பேசியதுடன், அதற்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
லஷ்கர்
லஷ்கர் இ தொய்பா அமைப்பு தொய்வடைந்து கொண்டிருந்தது பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐக்கு கவலையாக இருந்தது. லஷ்கர் இ தொய்பா ஆட்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள அல் கொய்தா அமைப்பில் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக போரிடப் போவதாக தெரிவித்தனர். அந்த அளவுக்கு அந்த அமைப்பின் நிலைமை மோசமாக இருந்தது.
ஐஎஸ்ஐ
லஷ்கர் இ தொய்பாவின் நிலைமையை நினைத்து கவலை அடைந்த நேரத்தில் தான் காஷ்மிரியின் திட்டம் பற்றி ஐஎஸ்ஐக்கு தெரிய வந்தது. உடனே காஷ்மிரியை அழைத்து நீங்கள் மும்பையை தாக்கக் கூடாது, அந்த திட்டத்தை எங்களிடம் அளியுங்கள் என்றது ஐஎஸ்ஐ. இதையடுத்து மும்பை தாக்குதல் திட்டம் லஷ்கர் இ தொய்பாவிடம் பகிரப்பட்டது. பின்னர் லஷ்கர் இ தொய்பா பயிற்சி எடுத்து மும்பையை தாக்கியது.
அல் கொய்தா
26/11 தாக்குல் பாணியில் ஐரோப்பாவில் தாக்குதல் நடத்த அல் கொய்தா தீவிரவாதிகள் பின் லேடனிடம் அனுமதி கேட்டது ப்ருக்ளின் விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. 9/11 தாக்குதல் நடத்தி உலகையே அதிர வைத்த அல் கொய்தா 26/11 பாணியில் தாக்க திட்டமிட்டது ஆச்சரியம் அளிக்கிறது.
தாக்கம்
9/11 தாக்குதல் பெரிது என்றாலும் 26/11 தாக்குதலின் தாக்கம் அதிகம் என்று கூறப்படுகிறது. 9/11 தாக்குதல் சில மணிநேரங்களில் முடிந்துவிட்டது. ஆனால் 26/11 தாக்குதல் 3 நாட்களாக நடந்தது. 26/11 தாக்குதலின்போது பிணையக் கைதிகள் பிரச்சனையும் ஏற்பட்டது. இது போன்ற தாக்குதல்களின்போது அரசு நிலைகுலையும். அதனால் தான் 26/11 தாக்குதல் பாணியை அல் கொய்தா தேர்வு செய்துள்ளது.