உங்கூட குடும்பம் நடத்துறதுக்கு கம்பி எண்ணலாம்... மனைவி தொல்லையால் திருடி ஜெயிலுக்குப் போன கணவர்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் வீட்டிற்கு செல்ல மனம் இல்லாமல், வங்கியில் திருடி தானே போலீசில் சிக்கி சிறைக்கு சென்றுள்ளார் வினோதமான கணவர் ஒருவர்.
அமெரிக்காவின் மிசவ்ரி மாகாணத்தில் உள்ளது கன்சாஸ் சிட்டி. இங்கு மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார் லாரன்ஸ் ஜான் ரிப்பிள் எனும் 70 வயது தாத்தா.

சம்பவத்தன்று தனது மனைவியுடன் சண்டையிட்டு விட்டு வெளியில் கிளம்பியுள்ளார் லாரன்ஸ். அப்போது, 'உன்னுடன் வாழ்வதற்கு சிறையே மேல்' என அவர் கூறியதாகத் தெரிகிறது.
பின்னர் அருகில் உள்ள வங்கிக்கு சென்ற அவர், ஒரு பேப்பரில், என்னிடம் துப்பாக்கி உள்ளது, எனக்கு பணம் தேவை என்று எழுதி வங்கி அலுவலரிடம் கொடுத்துள்ளார். இதைப் பார்த்து பயந்து போன வங்கி அலுவலரும் அவருக்கு 3000 டாலர் கொடுத்துள்ளார்.
இந்த பணத்தை வாங்கிக்கொண்டு தப்பிச் செல்வதற்கு பதிலாக அருகில் இருந்த இருக்கையில் உட்கார்ந்த லாரன்ஸ், அங்கிருந்த பாதுகாவலர்களிடம் பணத்தை கொடுத்து தான் திருட வந்ததை கூறி, போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க வலியுறுத்தியுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியுடன் சண்டை ஏற்பட்டதையும், அதனால் வீட்டுக்குச் செல்லப் பிடிக்காமல் சிறைக்கு வர விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இப்படியாக லாரன்ஸ் மனம் வெறுத்துப் போகும் அளவிற்கு, அவருக்கும் அவரது மனைவிக்கும் என்ன பிரச்சினை என்பது குறித்து தெரியவில்லை.












Click it and Unblock the Notifications