தமிழக விவசாயிகளுக்காக அமெரிக்காவில் போராட்டங்கள்… இந்திய தூதரகத்தில் பிரதமருக்கு மனு!
வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசி, டல்லாஸ் மற்றும் சியாட்டல் நகரங்களில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழக விவசாயிகளைக் காக்கக் கோரி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பிரதமர் மோடிக்கு மனுவையும் கொடுத்தனர்.
பச்சைத் துண்டு கட்டி..
வாஷிங்டன் இந்திய தூதரகத்திற்கு எதிரில் சனிக்கிழமை காலை 11 மணி அளவில் சுமார் 100 தமிழர்கள் ஒன்று திரண்டு தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர். தலையில் பச்சைத் துண்டு கட்டி பலர் வந்திருந்தார்கள்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவேரி டெல்டா பாதுகாக்கப்பட்ட விவசாயப் பகுதியாக அறிவிப்பு, தமிழக விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு தடை, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது.
கோரிக்கைகளை பிரதமருக்கு மனுவாக எழுதி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சுமார் 1500 இதுவரையிலும் மனுவில் கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
இந்திய தூதரகம் வழியாக பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு இந்த மனு அனுப்பபட உள்ளது.
மேற்கே சியாட்டலிலும் சனிக்கிழமை காலை பெல்வியூ நூலகத்திற்கு அருகே தமிழர்கள் ஒன்று கூடினார்கள். டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
காவேரி மேலாண்மை வாரியம், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பனுக்கு தடை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவில் கையெழுத்திட்டனர். இந்த மனுவும் இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்கப் பட உள்ளது.
தெற்கே டல்லாஸில் , இர்விங் தாமஸ் ஜெஃபர்சன் பார்க்கில் ஞாயிற்றுக்கிழமை தமிழக விவசாயிகளுக்காக ஆதரவுக் கூட்டம் நடைபெற்றது.
பங்கேற்ற தமிழர்கள், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பனுக்கு தடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
அமெரிக்காவில் நடைபெற்ற இந்த மூன்று போராட்டங்களுமே காந்தி சிலைக்கு அருகே நடைபெற்றுள்ளன.
அமெரிக்காவில் காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது மிகவும் குறைவான இடங்களே. வெவ்வேறு ஊர்களில் போராட்டம் நடத்தியவர்கள் எல்லோருமே காந்தி சிலைக்கு பக்கத்தில் இடத்தை தேர்வு செய்தது ஆச்சரியமான ஒற்றுமையாகும்.
-இர தினகர்