ஆப்கன் தலைநகரில் அமெரிக்கா ராக்கெட் தாக்குதல்.. ஆயுதம் நிரம்பிய கார் அழிப்பு.. மீண்டும் பரபரப்பு
காபூல்: ஆப்கன் தலைநகர் காபூல் அருகே இன்று நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் குழந்தை ஒன்று கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அதை அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்கா நடத்திய இந்த ராக்கெட் தாக்குதலில் ஆயுதம் நிரம்பிய கார் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதில் இருந்து அங்கு மிகப் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றினர்.
இத்தனை விரைவாக காபூலை தாலிபான்கள் கைப்பற்றுவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் தற்போது தங்கள் நாட்டுக் குடிமக்களை வெளியேற்றும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காபூல் குண்டுவெடிப்பு
மேலும், தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு அங்கிருந்து வெளியேறப் பல்லாயிரக்கணக்கான ஆப்கன் மக்களும் முயன்று வருகின்றனர். இதனால், காபூல் விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரக் கணக்கான மக்கள் கூடியுள்ளனர். இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐஎஸ் பயங்கரவாதிகள் அங்கு நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், அமெரிக்கப் படை வீரர்கள் 13 பேரும் இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர்.

ராக்கெட் தாக்குதல்
இந்தச் சூழலில் இன்று மாலை ஆப்கன் தலைநகர் காபூல் அருகே மீண்டும் பலமான சத்தத்துடன் குண்டுவெடித்ததாகத் தகவல் வெளியானது. முதலில் குண்டுவெடிப்பு தாக்குதல் எனச் சொல்லப்பட்ட நிலையில், அதன் பின்னரே அது ராக்கெட் தாக்குதல் எனத் தெரிய வந்தது. காபூலில் மக்கள் நெருக்கடி அதிகமுள்ள பகுதியில் நடந்த ராக்கெட் தாக்குதல் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் இருந்த வீடு ஒன்றை ராக்கெட் தாக்கியுள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சதிச்செயல் முறியடிப்பு
இந்நிலையில், இந்த ராக்கெட் தாக்குதலை நடத்தியது அமெரிக்கா என தெரியவந்துள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலில் ஆயுதம் நிரம்பிய கார் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தாலிபான்களும் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர். இந்தத் தாக்குதலில் கார் வெடிகுண்டு நிரம்பிய கார் அழிக்கப்பட்டதாகவும் காபூல் விமான நிலையத்தில் மற்றொரு தாக்குதலை இந்த கார் மூலம் நடத்தப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இந்த ராக்கெட் தாக்குதலில் 3 பேர் வரை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழப்புகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது முன்னதாக இந்த ராக்கெட் தாக்குதலில் குழந்தை ஒன்று உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில், அமெரிக்கா மற்றும் தாலிபான்கள் நிலைமையை விளக்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

அதிபர் பைடன்
முன்னதாக காபூல் விமான நிலையில் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நம்பகமான தகவல் வந்ததுள்ளதால் காபூல் விமான நிலையத்தில் இருந்தும் பொது இடங்களில் இருந்தும் அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் பைடன் கேட்டுக் கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications