அமெரிக்காவுடன் நெருங்கும் இந்தியா.. ரஷ்யாவுக்கு கோபமா? உச்சிமாநாடு ரத்தானது ஏன்?
மாஸ்கோ: கடந்த 20 வருடங்களில் முதல் முறையாக, இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நடைபெறவிருந்த வருடாந்திர உச்சி மாநாடு இந்த வருடம் நடைபெறாது என்று தெரிகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட குவாட் நாடுகளுடன் இந்தியா உறவை பலப்படுத்தியதால் ரஷ்யா அதிருப்தியடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கடந்த 2000மாவது ஆண்டு முதல் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
உச்சி மாநாடு நடைபெறவில்லை
இருநாடுகளிடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முக்கியமான ஆலோசனைகள் இந்த மாநாட்டின் போதுதான் மேற்கொள்ளப்படும். ஆனால் இந்த வருடம் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான உறவு நீண்ட நெடுங்காலமாக பலமாக இருந்த போதிலும் கடந்த 2010ஆம் ஆண்டு, மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகை தந்தார். அப்போது இரு நாடுகள் இடையேயான உறவு அதுவரை இருந்த கூட்டாளி என்ற அந்தஸ்தில் இருந்து சிறப்பு மற்றும் தனி சலுகை கூட்டாளி என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது.
அமெரிக்காவுடன் உறவு
அதேநேரம் இந்த வருடம் இரு நாடுகள் இடையே உச்சி மாநாடு நடைபெறாமல் போனதற்கு காரணம் தற்போதைய மத்திய அரசு, அமெரிக்கா உள்ளிட்ட 3 குவாட் நாடுகளுடன் அதிகமாக நட்பை பேணியதுதான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் மாறி மாறி இதுவரை 20 உச்சி மாநாடுகள் நடந்துள்ளன.
தலைவர்கள் பங்கேற்பது வழக்கம்
2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்று இருந்தார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 19-வது உச்சி மாநாட்டின்போது விளாடிமிர் புடின் டெல்லி வருகை தந்தார். இந்த வருடத்துக்கான உச்சிமாநாடு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது நடைபெறவில்லை.
சீன பிரச்சினையில் ரஷ்யாவின் முயற்சி
இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையில் சமாதானம் செய்வதற்கு ரஷ்யா முயற்சி செய்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ரஷ்யா, இந்தியா, சீனா இடையேயான ஆலோசனைக்கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்ற போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் இடையே சந்திப்பு நடத்த ரஷ்யா ஏற்பாடு செய்து கொடுத்தது.
குவாட் நாடுகளுடன் நட்பு
ஆனால், சீனாவுக்கு கடுமையான எச்சரிக்கையை கொடுப்பதற்காக, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது உறவை அதிகப்படுத்தியது. குவாட் நாடுகள் என இந்த கூட்டணி அழைக்கப்படுகிறது. குவாட் நாடுகள் பங்கேற்கும், மலபார் கூட்டு கடற்படை பயிற்சியில் போது இந்த முறை ஆஸ்திரேலியாவும் இணைந்து கொண்டு பயிற்சி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.