"நாங்க பார்த்தோம்.. கராச்சியில் இந்திய போர் விமானங்கள் என்ட்ரி"- பதறும் பாகிஸ்தான் மக்கள்.. பரபரப்பு
கராச்சி: இந்திய விமானப்படையின் போர் விமானங்கள், நேற்று நள்ளிரவு, பாகிஸ்தான் வான் எல்லைக்குள் பறந்ததாக வெளியான தகவல் அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிலும், பாகிஸ்தானின் வர்த்தக தலைநகராக கராச்சி எல்லைக்குள் இந்திய போர் விமானங்கள் நுழைந்ததாக பரபரப்புடன் அங்குள்ள மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
இந்தியா மற்றொரு பாலக்கோட் வகை தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அலறுகிறார்கள் பாகிஸ்தான் நெட்டிசன்கள். இதற்கெல்லாம் என்ன பின்னணி என்று கேட்கிறீர்களா.. வாருங்கள் பார்க்கலாம்.
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் சரமாரி துப்பாக்கி சூடு.. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மதியழகன் வீர மரணம்
நள்ளிரவு நேரம்
நேற்று நள்ளிரவில், கராச்சி பகுதியில் அந்த நகர மக்கள் ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்துள்ளனர். இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் கராச்சி வான் எல்லைக்குள் பறந்ததை தாங்கள் பார்த்ததாக சில மக்கள் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவு செய்தனர். இதையடுத்து அந்த நகரைச் சேர்ந்த மேலும் பல மக்களும் ட்விட்டரில் தாங்களும் போர் விமானத்தை பார்த்ததாக கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
விளக்கம் தேவை
பாகிஸ்தானை சேர்ந்த வாஜ்கான் என்ற பத்திரிகையாளர், பாகிஸ்தான் நிர்வாகம் செய்யும் காஷ்மீர் பகுதி, சிந்து ராஜஸ்தான் பகுதி போன்றவற்றில் இந்திய விமானப்படை விமானங்கள் பறந்ததாக பரபரப்பாக பேசிக் கொள்ளப்படுகிறது. இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும். மக்கள் நிம்மதியாக இந்த வாரத்தை கடப்பதற்கு அது உதவும் என்று தெரிவித்துள்ளார்.
|
பாகிஸ்தான் விமானம்
சிலர், இது இந்திய விமானப்படையின் போர் விமானம் கிடையாது. பாகிஸ்தான் விமானப்படை விமானம்தான் ராஜஸ்தான் எல்லையில் பறந்து உள்ளன என்று கூறுகிறார்கள். குறிப்பாக, ஜேஎப் 17 தண்டர் மற்றும் மிராஜ் போர் விமானங்கள் கராச்சி வான் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டதாகவும், அதைத்தான் மக்கள் தவறுதலாக இந்திய போர் விமானம் என்று நினைத்து பயந்து கொண்டு இருப்பதாகவும் கூறுகிறார் சல்மான் மன்சூர் என்ற ஒரு நெட்டிசன். இதுபற்றிய வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
நிம்மதியாக தூங்குங்கள்
அதேநேரம், பாகிஸ்தான் ராணுவம் இது தொடர்பாக எந்த ஒரு விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை. பாகிஸ்தான் ஸ்ட்ராடஜி குழு என்ற அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில், "அனைவரும் நிம்மதியாக தூங்குங்கள் பாகிஸ்தான் விமானப்படை முழித்துக் கொண்டிருக்கிறது" என்று மட்டும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானியர்களின் அச்சம்
சமீபத்தில், பெங்களூரில் மர்மமான ஒரு சப்தம் எழுந்தது. அப்போது அனைவரும் அது பற்றி பரபரப்பாக பேசினர். பின்னர், பாதுகாப்பு அமைச்சகம் அளித்த விளக்கத்தில், இந்திய போர் விமானம் ஒத்திகையில் ஈடுபட்ட போது எழுந்த, சோனிக் பூம் என்ற சத்தம் தான் அது என்று தெரிவித்திருந்தது. ஆனால், பாகிஸ்தானில் இந்திய விமானப்படையின் விமானங்கள்தான் தங்கள் நாட்டு எல்லைக்குள் வந்து விட்டதாக நினைத்து அச்சமடைந்து கொண்டிருக்கிறார்கள். இந்திய தரப்பு இதுவரை அப்படி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் ரோந்து
இதனிடையே, இந்திய போர் விமானங்கள் பறந்ததாக கூறப்படும் தகவலையடுத்து, பாகிஸ்தான் போர் விமானங்கள், கராச்சி வான் எல்லையில் கூடுதலாக ரோந்து சுற்றி வருகின்றன. ஆனால் பாகிஸ்தானுக்குள் அத்துமீறி செல்லவில்லை என்று இந்திய விமானப்படை வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.