இத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் பலி- கொரோனா அச்சத்தால் எல்லைகளை மூடியது அர்ஜென்டினா
ரோம்: இத்தாலியில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 368 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானதை அடுத்து அர்ஜென்டினா தன் நாட்டு எல்லைகளை மூடி வருகிறது.
Recommended Video
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. எனினும் சீனாவில் அதன் தாக்கம் குறைந்துவிட்டது. சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3213 ஆனது.
இதை தொற்று நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவை அடுத்து கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானது இத்தாலி. இங்கு நேற்று முன் தினம் ஒரே நாளில் 368 பேர் பலியாகிவிட்டனர்.
இதன் மூலம் அங்கு பலி எண்ணிக்கை 1,809 ஆக அதிகரித்துவிட்டது. 24,747 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அது போல் ஈரானிலும் ஒரே நாளில் 129 பேர் பலியாகிவிட்டனர். ஸ்பெயினிலும் பலி எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துவிட்டது. இங்கு கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.
மருத்துவம், மருந்து, உணவு, பணி ஆகியவற்றுக்காக மட்டும்தான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். தேவையின்றி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை என அரசு உத்தரவிட்டுள்ளது. அது போல் தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவிலும் 56 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து மேலும் வைரஸ் பரவுவதை தடுக்க நாட்டின் எல்லைகளை அடுத்த 15 நாட்களுக்கு மூட அர்ஜென்டினா அரசு முடிவு செய்துள்ளது. அது போல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதித்துள்ளது. தென் கொரியாவில் 76 பேர் பலியான நிலையில் அனைத்து ஐரோப்பிய நாட்டு பயணிகளுக்கும் குடியுரிமை கட்டுப்பாடுகளை அந்நாடு மேலும் இறுக்கி உள்ளது.