மலேசியாவில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு.. 8 பேர் பலி, பலர் மாயம்.. அரசு மீது கடும் கோபத்தில் மக்கள்
மலேசியா: தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவில் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெருக்கால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் முறை தவறிப் பெய்யும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உலக நாடுகள் போதிய முயற்சிகள் எடுப்பதில்லை.
இந்த ஆண்டு மட்டும் ஜெர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகளில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வெப்ப அலை வீசியது. இதில் சிக்கி பலரும் உயிரிழந்தனர்.

வெள்ளம்
இந்தச் சூழலில் தற்போது மலேசியாவில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்று தான். இருப்பினும், அங்குக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அளவுக்கு அதிகமாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு நாடு முழுவதும் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

8 பேர் பலி
இந்த வெள்ளத்தில் சிக்கி குறைந்தபட்சம் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு நிலைமையைச் சமாளிக்க ராணுவம் களமிறங்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் மீட்புப் பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலேசியாவில் அதிக மக்கள் வசிக்கும் பகுதியாகவும் அந்நாட்டின் பணக்கார மாநிலமாகவும் கருதப்படும் சிலாங்கூரில் தான் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பலர் மாயம்
இது மட்டுமின்றி வெள்ளத்தால் சிலர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் அங்குள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களைப் படகுகள் மூலம் மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வெள்ளம் காரணமாக அங்கு ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
|
பொதுமக்கள் பாதிப்பு
இது தொடர்பாக அந்நாட்டின் ஜனநாயக செயல் கட்சியின் எம்பி ஹன்னா யோஹ் கூறுகையில், "மூன்றாவது நாளாக இன்னும் வெள்ள பாதிப்பு மோசமாக உள்ளது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு உடனடியாக மக்களுக்கு உதவ வேண்டும். அப்போது தான் உயிரிழப்புகள் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியும்" என்றார். கனமழை தற்போது குறைந்துள்ளதால் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
|
எதிர்கட்சிகள் சாடல்
நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதால், இன்னும் எத்தனை பேரை மீட்க வேண்டும் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. வெள்ளம் ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று அந்நாட்டின் எதிர்க்கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. மீட்புப் பணிகளில் ஈடுபட போதிய நபர்கள் இல்லை என்றும் படகுகளுக்கும் பற்றாக்குறை நிலவுவதாக எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது.












Click it and Unblock the Notifications