ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்குள் பர்தா அணிய தடையா? பிரதமர் விளக்கம்
கான்பெரா: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்குள் பர்தா அணிந்து வரும் பெண்களுக்கு தடை விதிக்கும் முடிவை சபாநாயகர் வாபஸ் பெற வேண்டும் என்று அந்த நாட்டின் பிரதமர் டோனி அப்போட் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தால், அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு வரலாறு காணாத பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பாதுகாப்பின் ஒரு அங்கமாக, பர்தா அணிந்தபடி பெண்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருவதை தடுக்க அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் திட்டமிட்டுளார்.
இதற்கு அங்குள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது மத உரிமையை மறுக்கும் செயல் என்று கண்டன குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் "ஆஸ்திரேலியாவில் ஜனநாயகம் காக்கப்படுகிறது. மக்கள் எதை உடுத்த வேண்டும், எதை உடுக்க கூடாது என்று அரசு சொல்லிக்கொண்டிருக்காது. அதே நேரம் நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருக்க மேலும் தீவிர சோதனையை நடத்தி பர்தா பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும்" என்றார்.
இதனால் ஆஸ்திரேலியாவில் ஒரு வாரமாக பர்தா குறித்து நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வந்துள்ளன.