ஒழுங்கா முடிய வெட்டு, இல்ல மார்க்குல கட்... ஆஸ்திரேலிய பள்ளியில் வினோத தண்டனை
கான்பெரா: முடியை ஒழுங்காக வெட்டவில்லையா, அவ்வளவுதான் மதிப்பெண்ணில் 20 விழுக்காடு கட் செய்யப்படும் என்று அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு பள்ளி.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியிலுள்ளது ஆல் செயின்ட்ஸ் கத்தோலிக் சீனியர் கல்வியகம். இந்த பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களுக்கு ஆடை, அலங்கார விஷயத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் கண்டபடி முடியை வெட்டி டெரர் கிளப்ப கூடாது என்பதும் ஒரு நிபந்தனை.
ஆனால் பள்ளியின் பிளஸ்-1, மாணவரான டொமினிக் (17), விதிமுறைகளை மீறி ஸ்டைலிஷாக ஹேர் கட் செய்துவிட்டு வேதியியல் பரிட்சை எழுத வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள் முடியை ஒழுங்காக வெட்டிவிட்டு வந்து தேர்வு எழுதுமாறு கூறியுள்ளனர்.
இதனால் டொமினிக் பள்ளியை விட்டு வெளியேறினார். இன்று முடியை திருத்திவிட்டு மீண்டும் தேர்வெழுதியுள்ளார். இருப்பினும் ஒழுங்கீனத்துக்காக அவர் பெறும் மதிப்பெண்ணில் 20 சதவீதத்தை கட் செய்ய கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து டொமினிக் நிருபர்களிடம் கூறுகையில், "என்னைவிட மோசமாக ஹேர் கட் செய்துள்ள மாணவர்கள் இதே பள்ளியில் உள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் என்னை முன் உதாரணமாக காண்பிக்க வேண்டும் என்று விரும்பிவிட்டனர்" என்றார்.
டொமினிக்கின் தாய் கூறுகையில், எனது மகனுக்காக விதிமுறைகளை வளைக்க வேண்டாம். ஆனால் தேர்வுகள் முடிந்த பிறகு இந்த பிரச்சினையை கிளப்பியிருக்கலாம். இந்த சம்பவத்தால் எனது மகனின் படிப்பு பாதிக்கப்படுகிறது என்றார். அதே நேரம் பள்ளியின் முதல்வர் டேவிட் பெட்டர்பிளேஸ் இந்த பிரச்சினையில் தனது பள்ளி எடுத்த முடிவு சரியானதுதான் என்று கூறியுள்ளார். விதிமுறைகள் தெளிவாக இருக்கும்போது தவறு செய்பவர்களுக்கு வளைந்து கொடுக்க வேண்டியதில்லை என்று அவர் கூறினார்.