ஹாய் எப்டி இருக்கே...? செடிகளிடம் பேச 3 ஊழியர்களை நியமித்த ‘பூ’ நிறுவனம்
லண்டன்: இங்கிலாந்தில் இயங்கி வரும் பூ வளர்ப்பு நிறுவனம் ஒன்று, தினமும் பூக்களிடம் பேசவும், பாட்டுப் பாடவும் என மூன்று ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது.
இங்கிலாந்தில் இயங்கி வரும் பி அண்ட் க்யூ என்ற நிறுவனம் தோட்டத்தை செழுமைப்படுத்துவது தொடர்பான பணிகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்குக் கீழே இயங்கும் பூ வளர்ப்பை முதன்மையாகக் கொண்ட நிறுவனத்தில் சமீபத்தில் மூன்று ஊழியர்கள் புதிதாக பணியில் அமர்த்தப் பட்டனர்.
இவர்களது வேலை என்ன தெரியுமா? தினமும் அலுவலகத்திற்கு வந்ததும், அங்குள்ள தோட்டத்தில் உள்ள செடிகளில் மலர்ந்துள்ள பூக்களிடம் பேச வேண்டும், பாட வேண்டும்.
மனிதர்களைப் போல் தான்...
இவர்களை பணியில் நியமித்த தோட்டக்கலை நிபுணர் டிம் க்ளாப் இது குறித்துக் கூறுகையில், "மனிதர்கள் போல செடிகளுக்கும் உயிர் இருக்கிறது. நீங்கள் கவனிக்கவில்லை எனத் தோன்றினால் அது வாடிவிடும்.
செடிகள் ஹேப்பி...
ஒவ்வொரு செடி வகைகளுக்கும் ஏற்றாற்போல் அவற்றிற்கு குறிப்பிட்ட பாட்டுப் பாடுவதோ, குறிப்பிட்ட விதத்தில் பேசுவதோ மகிழ்ச்சியளித்து அவை நன்கு வளர உதவும்' என்கிறார்.
பாதிப்பேர்...
இது தொடர்பாக இரண்டாயிரத்துக்கும் அதிகமானோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இங்கிலாந்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் தோட்டத்து செடிகளுடன் பேசுவது தெரிய வந்துள்ளது.
லண்டனில்...
அதிலும், லண்டனைச் சேர்ந்த அறுபது சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் இந்த விஷயத்தை நம்புவதால் தாங்கள் தினமும் செடிகளிடம் பேசுவதாக தெரிவித்துள்ளனர்.
வட அயர்லாந்தில்...
வட அயர்லாந்தைச் சேர்ந்த மக்களில் நாற்பத்தி இரண்டு சதவிகிதத்தினர் செடிகளிடம் பேசுவதாகவும், நாற்பத்தைந்து சதவிகித மக்கள் பேசுவது பூ மலர உதவுவதாகவும் கூறியுள்ளனர்.
நம்பிக்கை...
இவர்களில் 55 வயதுக்கு மேற்பட்டோரில் ஐம்பத்தேழு சதவிகிதத்தினர், ‘தாம் பேசுவதால்தான் செடிகள் வளருவதாக' ஆணித்தனமாக நம்புவதாக இந்த ஆய்வு கூறுகின்றது.