வங்கதேசத்தில் பயங்கரம்.. இந்து இளைஞரை அடித்து கொன்று தீ வைத்த மர்ம கும்பல்.. உச்சக்கட்ட பதற்றம்
டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் ஒரு அரசியல் குழப்பம் வெடித்துள்ளது. அங்கு இளம் அரசியல் தலைவராக அறியப்பட்ட ஷெரிப் உஸ்மான் ஹாடி உயிரிழந்த நிலையில், அங்கு நாடு முழுக்க வன்முறை வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தில் இந்து இளைஞர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டு, அவரது உடலை மரத்தில் கட்டி வைத்து எரித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்தாண்டு மிக பெரிய மக்கள் போராட்டம் வெடித்து ஹசீனா அரசு கவிழ்க்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு பல மாதங்கள் கழித்து அங்கு மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்தது. கலவரம், வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் வங்கதேசத்தில் இப்போது மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.

அடித்து கொலை
அங்கு இளம் அரசியல் தலைவரும் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியவருமான ஷெரிப் உஸ்மான் ஹாடி மரணத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நபிகள் நாயகத்தை அவமதித்ததாகச் சொல்லி, அங்கு இந்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நேற்றிரவு மர்மக் கும்பல் அந்த இளைஞரை அடித்தே கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தீ வைப்பு
மைமென்சிங் மாவட்டத்தின் பல்லூகா உபஜிலா, துபாலியா பரா பகுதியில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஜவளி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்த தீபு சந்திர தாஸ் என்பவரே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். அந்த இளைஞர் நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறு பேசியதாகச் சொல்லி, இளைஞர்கள் சிலர் அவரை தாக்கியுள்ளனர். அந்தக் கும்பல் மிக கொடூரமாகத் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காத அந்தக் கும்பல், தீபு சந்திர தாஸ் உடலை அங்கு மரத்தில் கட்டி வைத்து தீவைத்துள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில் இந்தக் கொடூரம் நடந்துள்ளது.
போலீசார்
இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மிகவும் பதற்றமான நிலை இருந்த சூழலில், நிலைமையை முதலில் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பிறகு உடலை மீட்ட போலீசார், அருகே உள்ள மருத்துவமனைக்கு உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது.
தீபு சந்திர தாஸின் குடும்பத்தினரைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். உடலைக் குடும்பத்தினரிடம் ஒப்படைத்த பிறகு சட்ட நடவடிக்கை தொடங்கும் என அங்குள்ள போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
என்ன நடந்தது!
ஷெரிப் உஸ்மான் ஹாடி உயிரிழப்பைத் தொடர்ந்தே அங்கு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உஸ்மான் ஹாடி போட்டியிடத் தயாராக இருந்தார். இதற்காகக் கடந்த வாரம் தான் அவர் தலைநகர் டாக்காவில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அப்போது அங்கு மாஸ்க் அணிந்து வந்த வந்த மர்ம நபர்கள் சிலர் ஹாடியை சுட்டனர். இதில் அவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவமனையில் அவருக்குத் தீவிரச் சிகிச்சை தரப்பட்டது. இருந்த போதிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் அவர் உயிரிழந்தார். இந்தத் தகவல் நேற்றிரவு தான் வெளியானது. அதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications