சீனத் தலைநகரி்ல் பொது இடத்தில் "தம்" அடிக்கத் தடை.. மீறினால் ரூ. 2,000 அபராதம்!
பெய்ஜிங்: சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகை உயிருக்குப் பகை என எவ்வளவு தான் எச்சரித்தாலும், இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதைக் கேட்பதாக இல்லை. இவர்கள் பொது இடங்களில் புகைப் பிடித்து தங்கள் உயிருக்கு மட்டுமல்லாமல், மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கிறார்கள்.
எனவே, இத்தகைய புகைக்கு அடிமையானவர்களைக் கட்டுப்படுத்த சீனா அதிரடியாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
முதல்கட்டமாக...
முதல்கட்டமாக இந்தத் தடை தலைநகர் பெய்ஜிங்கில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொது இடங்களான அலுவலகம், உணவகம், ஓட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளில் புகைப்பிடிப்பது சட்டப்படி குற்றமாகும்.
புதிய சட்டம்...
பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டம் ஏற்கனவே அமலில் இருந்தாலும், அதை முழுவதுமாக தடை செய்ய முடியாமல் இருந்தது. இப்போது போடப்பட்டுள்ள புதிய சட்டப்படி அது கடுமையாக தடுக்கப்படும் என்று சீன அரசாங்கம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
அபராதம்...
பொது இடங்களில் புகைப் பிடிப்பவர்களை பிடிப்பதற்கான ஆயிரக்கணக்கான அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு தடையை மீறி புகைப் பிடிப்பவர்களுக்கு 200 யுவான் ( அங்குள்ள பணம் ) ( சுமார் 2050 ரூபாய் ) அபராதம் செலுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் தப்பு செய்து அபராதம் செலுத்தியவர்கள் விபரம் அரசாங்க வெப்சைட்டில் வெளியிடப்படும் என்றும் சீன அரசு எச்சரித்துள்ளது.
நடைமுறைச் சிக்கல்கள்...
அரசின் இந்தச் சட்டத்தை பின்பற்றுவதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாக அலுவலங்கள் மற்றும் ஹோட்டல்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. ஆனால், இத்தடையை நடைமுறைப் படுத்தாத அலுவலகங்கள் மற்றும் ஹோட்டல்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என சீன அரசு தெரிவித்துள்ளது.
விளம்பரத்திற்கும் தடை...
சீனாவில் ஏற்கனவே புகையிலை பொருள் விளம்பரம் வைக்கவும் தடை செய்யப்பட்டிருக்கிறது. சீனாவில் 30 கோடி பேர் புகைப்பழக்கம் உள்ளவர்கள் என்றும் வருடந்தோறும் புகை பழக்கத்தால் உயிர் இழப்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் அதிகம் என்றும் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
விழிப்புணர்வு பிரச்சாரம்...
புகைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தீவிரப்படுத்தி வரும் சீன அரசு, பெய்ஜிங்கைத் தொடர்ந்து விரைவில் நாடு முழுவதும் புகைக்கு தடை விதிக்க யோசித்து வருகிறது