நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மருத்துவக் குழுவுடன் வருகை தந்த பூடான் பிரதமர்!
திம்பு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு தனது நாட்டிலிருந்து மருத்துவ உதவிக் குழுவுடன் வருகை தந்தார் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்காய். நேபாள அரசுக்கு உதவும் வகையில் மருத்துவக் குழுவுடன் நேபாளம் வந்திருந்தார் பூடான் பிரதமர்.
மேலும் நேபாள அரசிடம் 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவிக்கான காசோலையையும் அவர் வழங்கினார். பூடான் மக்கள் சார்பில் இந்த உதவியை வழங்குவதாக அவர் கூறியுள்ளாரா்.
மேலும் பூடான் மன்னரின் வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கல்களையும அவர் நேபாள மக்களுக்குத் தெரிவித்தார். மன்னரின் இரங்கல் கடிதத்தையும் அவர் நேபாள பிரதமர் மற்றும் நேபாள ஜனாதிபதியிடம் வழங்கினார்.
63 பேர் கொண்ட பூடான் குழுவில் மருத்துவர்கள், ராயல் பூடான் ராணுவ வீரர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வார்கள். மேலும் முகாம்அமைத்தும் சிகிச்சை அளிப்பார்கள்.
தங்களுடன் மருந்துகள், மருத்துவ சாதனங்கள், ஆடைகள், ஜமுக்காளம், போர்வை போன்றவற்றையும் அவர்கள் கொண்டு வந்துள்ளனர்.
டோப்காய் பூடான் திரும்பும்போது, நேபாள நிலநடுக்கத்தில் சிக்கி மீட்கப்பட்ட பூடான் மக்களுடன் திரும்புவார்.