நைஜீரியா: ராணுவ தாக்குதலில் போகோஹரம் தலைவர் அபுபக்கர் பலி? 130 தீவிரவாதிகள் சரண்!
அபுஜா: நைஜீரியாவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் போகோஹரம் இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த 130 தீவிரவாதிகள் ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.
நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். வடகிழக்கு பகுதியில் சில சிறிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். .
கடந்த ஏப்ரல் மாதம் சிபுக் கிராமத்தை சேர்ந்த ஒரு பள்ளிக்கூட மாணவிகள் 270 பேரை கடத்திச்சென்றனர். மேலும் தொடர்ந்து அப்பாவி பொதுமக்கள் மீதும், ராணுவம் மீதும் இந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நைஜீரிய ராணுவமும் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. நைஜிரியாவின் வட கிழக்கு பகுதியில் பியூ பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த தாக்குதலில் 135 போகோஹரம் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் ராணுவத்திடம் சரண் அடைந்தனர்.
மேலும் போகோஹரம் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான அபுபக்கர் இம்மோதலில் கொல்லப்பட்டதாக நைஜீரிய ராணுவ செய்தி தொடர்பாளர் கிரிஸ் ஒலுக்கோடே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சில புகைப்படங்களையும், வீடியோ காட்சியையும் நைஜீரிய ராணுவம் வெளியிட்டுள்ளது.