சீனாவில் தீவிரவாத தாக்குதலில் 30 பேர் பலி; காரில் வந்த தீவிரவாதிகள் குண்டுகளை வீசினர்
பீஜிங்: சீனாவின் ஷியாங்ஜியாங் பிராந்தியத்தில் சந்தையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளார்கள், மேலும், 90 பேர் காயமடைந்துள்ளனர்.
வடமேற்கு சீனாவிலுள்ள ஷியாங்ஜியாங் பிராந்தியத்தின் தலைநகரான உரும்கியூவில் மக்கள் கூட்டத்தின் மத்தியில் நுழைந்த இரு வாகனங்களில் இருந்து வெடிகுண்டுகள் மக்களை நோக்கி வீசப்பட்டுள்ளன. அதில் ஒரு கார் வெடித்து சிதறியது. இதில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 90 பேர் காயமடைந்தனர். உள்ளூர் நேரப்படி காலை 7.50 மணிக்கு இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடம் காட்டு தீயும் கடுமையான புகைமண்டலமாக காட்சியளித்தது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிராந்தியத்தில் முஸ்லிம் உய்குர் இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இவர்களுக்கும், ஹேன் சைனீஷ்களுக்கும் நடுவே நெடுங்காலமாக மோதல் இருந்து வருகிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து இந்த பகுதியை தனியாக பிரிக்க வேண்டும் என்ற பிரிவினைவாத கோரிக்கை இப்பிராந்தியத்தில் எப்போதும் பதற்றத்தை உருவாக்கி வந்ததாக கூறப்படுகிறது.