ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான வான்வழித் தாக்குதல் - அமெரிக்கா கூட்டணியில் இருந்து கனடா விலகல்!
ஒட்டாவா: சிரியா, ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து கனடா விலகிக் கொள்ளும் என்று அந்நாட்டின் புதிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவியேற்க இருக்கிறார்.

இந்த நிலையில் தனது முதல் நடவடிக்கையாக தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், சிரியா- ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்தும் வான்வழித் தாக்குதலில் இருந்து கனடா விலகிக் கொள்ளும் என்று அறிவித்துள்ளார் ட்ரூடோ. கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் முதல் கனடாவின் போர் விமானங்கள் சிரியா, ஈராக்கில் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனை அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் கனடா பிரதமர் ட்ரூடோ தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார். இதனால் சிரியா- ஈராக்கில் இருந்து கனடா போர் விமானங்கள் நாடு திரும்ப உள்ளன.
அதே நேரத்தில் வடக்கு ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை கனடா தொடர்ந்து வழங்கும் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications