அமெரிக்காவில் சர்ச்சுக்குள் புகுந்து 9 கருப்பினத்தவர்களை சுட்டுக் கொன்ற வெள்ளையர் கைது
சார்ல்ஸ்டன்: அமெரிக்காவில் உள்ள பிரபல கருப்பினத்தவர்கள் தேவாலயத்திற்குள் புகுந்து 9 பேரை சுட்டுக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சார்ல்ஸ்டன் நகரில் இருக்கும் பிரபல இமானுவல் ஆப்பிரிக்க மெதடிஸ்ட் எபிஸ்கோபல் தேவாலயத்தில் புதன்கிழமை மாலை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. பிரபல கருப்பினத்தவர்களின் தேவாலயமான அதற்குள் புகுந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார்.
இதில் 9 பேர் பலியாகினர். அவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். அவர் தப்பியோடும்போது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் அவரது உருவம் பதிவாகியிருந்தது. அந்த புகைப்படத்தை எடுத்து போலீசார் வெளியிட்டு அவர் குறித்த விவரம் தெரிந்தால் கூறுமாறு அறிவிப்பு வெளியிட்டனர்.
இது குறித்து போலீசார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கால்ஹூன் தெருவில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேடப்படும் நபரை கண்டுபிடிக்க போலீசாருக்கு உதவுங்கள் என்று தெரிவித்திருந்தனர்.
Help police find the suspect in the shooting @ 110 Calhoun St pic.twitter.com/92GW7fMCTA
— Charleston P.D. (@CharlestonPD) June 18, 2015
இந்நிலையில் 9 பேரை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பெயர் டிலன் ரூப். 21 வயதாகும் அவர் கருப்பினத்தவர்கள் மீது கொண்ட வெறுப்பால் இந்த செயலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஹில்லாரி கிளிண்டன் உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.