மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்... இரண்டு நகரங்களை முற்றிலும் முடக்கிய சீனா
பெய்ஜிங்: கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஹுபே மாகாணத்தில் இருக்கும் இரு நகரங்களைச் சீன அரசு முற்றிலுமாக முடக்கியுள்ளது.
சீனாவின் ஹுபே மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதலில் பரவ தொடங்கியது. சீனா முதலில் வைரஸ் பரவலைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் பின்னர் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.
இதன் காரணமாக வைரஸ் பரவல் அந்நாட்டில் விரைவில் கட்டுக்குள் வந்தது. இதனால் கடந்தாண்டு பிற்பகுதியிலேயே சீனாவில் இயல்பு நிலை திரும்பியது.

மீண்டும் கொரோனா பரவல்
இந்நிலையில் ஹூபே மாகாணத்தில் கடந்த வாரம் புதிதாக 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. குறிப்பாக, அம்மாகாணத்தில் இருக்கும் ஷிஜியாஜுவாங் மற்றும் ஜிங்டாய் ஆகிய நகரங்களில் கொரோனா பாதிப்பு பரவலாக உறுதி செய்யப்பட்டது.

கடும் ஊரடங்கு
இதையடுத்து இந்த இரு நகரங்களிலும் கடும் கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கை அந்நாட்டு அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது. இரு நகரங்களைச் சேர்ந்த மக்களும் நகரை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையின்றி வெளியே சுற்றும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.

வெளியிலிருந்து வந்த கொரோனா பாதிப்பு
தற்போது கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்புகள் அனைத்தும் மற்ற பகுதிகளிலிருந்து வந்தவர்கள் மூலம் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு என்றும் இதைத் தடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹூபே மாகாண அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும், அங்கிருக்கும் மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்நாட்டில் 6.29 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 2.21 கோடி பேருக்கும் இந்தியாவில் 1.04 கோடி பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications