பெல்ஜியம் உயிரியல் பூங்காவில் இரு நீர் யானைகளுக்கு கொரோனா!
ப்ரஸல்ஸ்: பெல்ஜியத்தில் உள்ள வன உயிர்பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிரமாண்ட உருவம் கொண்ட இரு நீர்யானைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உலகெங்கும் பரவியது. கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் கொரோனா வைரஸ் உடன் போராடி வருகிறது. அமெரிக்காவில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை அனைத்து நாடுகளையும் ஒரு கை பார்த்த கொரோனா பொருளாதாரம் வளர்ச்சி சுகாதார கட்டமைப்புகளை சிதைத்து விட்டது எனக் கூறலாம்..

உலகமெங்கும் கொரோனா பாதிப்பு
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு ஒரு பெருத்த அடியாக இருந்தது. ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்த நிலையில் லட்சக்கணக்கில் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு போராடி குணமடைந்தனர்..இரண்டு முழு ஊரடங்கு, அடுத்தடுத்த தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் என வாழப் பழகிய மக்கள், முககவசம், தனிமனித இடைவெளி, சனிடைசர் இன்றி வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்..

விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு
மீண்டும் உருவம் மாறுபாடு அமைந்த கொரோனா டெல்டா, ஆல்ஃபா என மாறி தற்போது ஓமிக்ரான் என உருமாறி உள்ளது. இருந்தபோதும் கோவிட் 19 எனும் கொரோனா இன்னும் ஆங்காங்கே சிறிய அளவில் பரவி வருகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் நாய், பூனை, சிங்கம், புலி என பல்வேறு விலங்குகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் ஆச்சரியமாக நீர்யானைகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இரு நீர்யானைகளுக்கு கொரோனா
பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் உயிரியல் பூங்காவில் யானை சிங்கம் புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் சில உயிரினங்களுக்கு தொற்று உறுதியான நிலையில் அங்குள்ள நீர் யானைகளுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில் 14 மற்றும் 41 வயதுடைய இரு பிரம்மாண்ட நீர் யானைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் யானைகளுக்கு கொரொனா எப்படி பரவியது என்பது தெளிவாக தெரியவில்லை.

நீர்யானைகள் நலமாக உள்ளன
பெல்ஜியம் நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரமாக உள்ள நிலையில், உயிரியல் பூங்காவிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன . பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும் நீர் யானைகளுக்கு தொற்று எப்படி பரவியது என்பது புரியாத நிலையில் இரு நீர்யானைகலும் நலமாக இருப்பதாகவும் சிறிய அளவில் மூக்கு ஒழுகுதல் அவதிப்பட்டு அவற்றை பூங்கா மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக பூங்காவை பராமரித்து வரும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications