சக்தியை மீறி செங்குத்தாக உயரப் பறந்த ஏர்ஏசியா விமானம்
ஜகர்தா: ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு செங்குத்தாக கூடுதல் உயரத்திற்கு சென்றுள்ளது ராடார் தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் வானில் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கையில் மோசமான வானிலை காரணமாக 38 ஆயிரம் அடிக்கு செல்ல தரைக் கட்டுப்பாட்டு அறையிடம் விமானி அனுமதி கேட்டுள்ளார். விமானத்தை இடப்புறமாக 7 மைல் தூரம் எடுத்துச் சென்று 34 ஆயிரம் அடி உயரத்திற்கு செல்ல உத்தரவிட்டும் விமானத்தில் இருந்து பதில் இல்லை.

இந்நிலையில் ராடார் தகவலின்படி விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு செங்குத்தாக உயரத்திற்கு சென்றது தெரிய வந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானம் ஏர்பஸ் 320 வகையைச் சேர்ந்தது. விமானம் தனது சக்தியை தாண்டி செங்குத்தாக பறந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மோசமான வானிலையை தவிர்க்க விமானம் திடீர் என்று செங்குத்தாக பறந்ததால் வேகமாக செல்ல முடியாமல் இருந்துள்ளது. வேகம் குறைந்ததால் விமானம் தடுமாறி கடலில் விழுந்திருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ராடார் தகவல்கள் கிடைத்துள்ள போதிலும் விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் தான் நடந்தது என்ன என்று தெரிய வரும்.












Click it and Unblock the Notifications