ஹஜ் கூட்டநெரிசல் விபத்து: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 51-ஆக உயர்வு
மினா: ஹஜ் பயணத்தின்போது மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.
உலக முஸ்லீம்கள் இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்தியாவில் இருந்து 1.5 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். ஹஜ் புனித பயணத்தின்போது சாத்தான் மீது கல்லெறியும் சடங்கு நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் சடங்கு நடக்கையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 769 பேர் பலியாகினர், 934 பேர் காயம் அடைந்தனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென்று தெரியாமல் உள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 28ம் தேதி வரை 45 ஆக இருந்தது. இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த 2 பேர், மகாராஷ்டிரா, குஜராத், பீகார் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவரும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.
இதையடுத்து மினா சம்பவதத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக கடந்த மாதம் 11ம் தேதி மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் கிரேன் முறிந்து விழுந்த விபத்தில் 11 இந்தியர்கள் உள்பட 100 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.