''சைட் எபெக்ட்'': பசியை குறைக்கும் சர்க்கரை வியாதி மாத்திரைகள்
ஸ்டாக்ஹோம்: சர்க்கரை நோய்க்கு அளிக்கப்படும் மருந்துகள் மூளையின் செயல்பாடுகளை மாற்றி, சாப்பிடும் அளவைக் குறைப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்வீடனில் உள்ள கோதென்பர்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. டைப் 2 சர்க்கரை நோய்க்கு அளிக்கப்படும் மருந்து பசியுணர்வைக் குறைப்பதாக எலியில் நடத்திய சோதனையில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், இந்த ஆய்வின் மூலம் உணவைப் போலவே மது குடிக்கும் உணர்வு தூண்டப்படுவதும் குறைகிறதாம்.
ஒரே மருந்து... 2 வேலை
இந்த ஆய்வை மேற்கொண்டுள்ள ரோசிடா அண்டர்பெர்க் கூறுகையில், "இந்த ஆய்வின் மூலம் ஒரே மருந்து இரண்டு ஹார்மோன்களைத் தூண்டும் வேலையைச் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பசியுணர்வு தூண்டப்படுவது குறைக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
பசி குறையும்...
ஒவ்வொரு முறை சாப்பாடு சாப்பிட்ட பிறகும் இந்த மாத்திரைகள் மூலம் ஜிஎல்பி-1 என்ற ஹார்மோன் ரத்தத்தில் அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் தான் உடலில் இன்சுலினின் அளவை அதிகரிக்கிறது. அதே சமயம் பசி உணர்வைக் குறைக்கிறது.
உடல் பருமன்...
இதன் மூலம் உடல் பருமனுக்கு சிகிச்சை தரும் புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
ஜிஎல்பி 1...
நமது குடல்களிலும், மூளையிலும் சுரக்கும் ஹார்மோன் ஜிஎல்பி -1. இது இயற்கையாக சுரக்கும் ஹார்மோன் ஆகும். ஒவ்வொரு முறையும் நாம் சாப்பிட்ட பிறகும் ஜிஎல்பி -1 ஹார்மோன் ரத்தத்தில் அதிகரிக்கும். இது இன்சுலினை அதிகரிக்கிறது. பசியுணர்வைக் குறைக்கும். இந்த ஹார்மோன் குறையும்போதுதான் சர்க்கரை வியாதி வருகிறது.
செயற்கை ஹார்மோன்...
தற்போது இதேபோன்ற செயற்கை ஹார்மோனை மருந்து மூலம் செலுத்துவதன் மூலம் பசியுணர்வைக் குறைப்பதோடு, இன்சுலின் அளவையும் ரத்தத்தில் அதிகரிக்க முடியும் என்பது ஆய்வின் முடிவாகும்.