"குழந்தை"க்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்க கடத்தப்பட்ட அமெரிக்க "வாத்தியார்"!
சியோல்: 2004ம் ஆண்டு அமெரிக்கர் ஒருவரை கடத்தி வரச் சொன்னாராம் மறைந்த வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் இல். தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் (அதில் ஒருவர்தான் தற்போதைய சர்வாதிகாரி கிங் ஜாங் உன்) ஆங்கிலம் மற்றும் அமெரிக்க கலாச்சாரம் குறித்துக் கற்றுத் தருவதற்காக இந்த கடத்தலுக்கு அவர் உத்தரவிட்டாராம்.
கடத்தப்பட்டதாக கூறப்படும் டேவிட் ஸ்னெட்டன் குறித்து இதுவரை தகவல் இல்லை. ஆனால் அவர் வட கொரியாவில்தான் இருப்பதாகவும், உள்ளூர் பெண்ணை மணந்துள்ள அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் ஸ்னெட்டனின் வட கொரியப் பெயர் ரயூன் பாங் சூ என்றும், அவரது மனைவி பெயர் கிம் யூன் ஹே என்றும் கூறப்படுகிறது. டெவிட்டுக்கு தற்போது 36 வயதாகிறது.

கடந்த 2004ம் ஆண்டு டேவிட் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். அவரை வட கொரியாவுக்குக் கடத்தி வர திட்டமிட்டது அப்போதை சர்வாதிகரார அரசு. இதற்குக் காரணம், டேவிட்டுக்கு கொரிய மொழி, சீன மொழியும் நன்கு தெரியும். எனவே அவரை கடத்தி வந்து தனக்கும், தனது பிள்ளகைளுக்கும் ஆங்கிலம், அமெரிக்க கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்ள சர்வாதிகாரி இல் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி சில சீன அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மியான்மர் எல்லைப் பகுதி அருகே வைத்து இவரைக் கடத்தினராம் வட கொரிய உளவுப் பிரிவு. பின்னர் இவர் பியாங்யாங் கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் டேவிட் குறித்த தகவல் ஏதும் இல்லை.
இதுகுறித்து சியோலில் உள்ள கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் சங்கத்தின் தலைவரான சாய் சூங் யாங் கூறுகையில், டேவிட் வட கொரியாவுக்குத்தான் கடத்தப்பட்டார் என்பதில் சந்தேகம் இல்லை. அதுகுறித்த தகவல்கள் என்னிடம் உள்ளன. அவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் உள்ளன. பெயரை மாற்றிக் கொண்டு பியாங்யாங் நகரில் அவர் வசித்து வருகிறார் என்றார்.
முன்னதாக ஸ்னெட்டன் மலையிலிருந்து விழுந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அப்படித்தான் அவரது பெற்றோர்களும் கூட நம்பினர். ஆனால் தற்போது அவர் கடத்தப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில்தான் ஸ்னெட்டனும் ஆங்கில டியூஷனுக்காக கடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்னெட்டனின் பெற்றோருக்கு வட கொரியர்கள் கடத்தியிருப்பார்கள் என்று இதுவரை சந்தேகப்படத் தோன்றவில்லை. இதனால்தான் இதுகாலம் வரை ஸ்னெட்டன் குறித்த சந்தேக வலையில் வட கொரியா விழவில்லை.
இல் உயிருடன் இருந்தபோது இதுபோன்று வெளிநாட்டுக்காரர்கள் அதிக அளவில் கடத்தப்பட்டனர். ஜப்பானியர்கள் உள்ளிட்ட பலர் இதுபோல கடத்தப்பட்டுள்ளனர். தனது நாட்டு உளவாளிகளுக்கு பல்வேறு நாடுகளின் மொழிகளைக் கற்றுத் தருவதற்காக சம்பந்த நாட்டுக்காரர்களஐ கடத்துவதை இல் அரசு வாடிக்கையாக வைத்திருந்தது.
மேலும் இல் ஒரு சினிமாப் பைத்தியமும் கூட. இதன் காரணமாக தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவரையும், இயக்குநரையும் கூட அவர் கடத்தி வரச் சொன்னார். அதன்படி இவர்கள் இருவரும் கடத்திச் செல்லப்பட்ட சம்பவமும் நடந்தேறியது நினைவிருக்கலாம். மேலும் தாய்லாந்து, ருமேனியா, லெபனான் நாட்டவர்களையும் இல் அரசு கடத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications