அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் கிறிஸ்தவரே அல்ல: போப் பிரான்சிஸ் ஆவேசம்
மெக்சிகோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் கிறிஸ்தவரே அல்ல என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள், பலாத்காரம் செய்பவர்கள் ஆகியோரை மெக்சிகோ சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற வைக்கிறது. நான் மட்டும் அதிபரானால் அமெரிக்கா மெக்சிகோ இடையே சுவர் எழுப்பி அங்குள்ளவர்கள் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுப்பேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் மெக்சிகோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு வாடிகன் கிளம்பும் முன்பு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் டிரம்ப் சுவர் கட்டுவது பற்றி கேட்கப்பட்டது.
கிறிஸ்தவரே அல்ல
பாலங்களுக்கு பதிலாக சுவர்கள் மட்டுமே கட்ட நினைக்கும் நபர் கிறிஸ்தவரே அல்ல என்று டிரம்ப் பற்றி போப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்
போப் பிரான்சிஸ் என் மதப்பற்றை கேள்விக்குறியாக்கியுள்ளது என்னை அவமதிப்பதாகும். நான் ஒரு உண்மையான கிறிஸ்தவர் என்பதில் பெருமை அடைகிறேன் என்கிறார் டிரம்ப்.
ஐஎஸ்ஐஎஸ்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வாடிகனை தாக்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள் தாக்கினால் தான் நான் அதிபராகியிருக்க வேண்டும் என்று மக்கள் நினைப்பார்கள் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெறுப்பு
அமெரிக்காவுக்குள் நுழைய முஸ்லீம்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி உலக முஸ்லீம்கள் மட்டும் அல்லாது பலரின் வெறுப்பையும் சம்பாதித்தவர் டிரம்ப். ஏற்கனவே அவர் மீது மக்கள் கடுப்பில் இருக்கையில் போப் பிரான்சிஸ் அவரை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.