மாயமான விமானம், சுட்டுத் தள்ளப்பட்ட விமானம்: 2 முறை மரணத்தில் இருந்து தப்பிய சைக்கிள் வீரர்
கோலாலம்பூர்: நெதர்லாந்தைச் சேர்ந்த சைக்கிள் வீரரான மார்டின் டீ ஜாங் இரண்டு முறை மரணத்தில் இருந்து தப்பியுள்ளார்.
நெதர்லாந்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் பக் ஏவுகணை வீசி தாக்கப்பட்டதில் 298 பேர் பலியாகினர்.
இந்நிலையில் அந்த விமானத்தில் செல்ல வேண்டிய ஒருவர் தற்போது கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டிருக்கிறார்.
சைக்கிள் வீரர்
நெதர்லாந்தைச் சேர்ந்தவர் மார்டின் டீ ஜாங்(29). சைக்கிள் வீரர். மலேசியாவின் டெரங்காணு சைக்கிள் குழுவின் உறுப்பினராக உள்ளார்.
எம்.ஹெச். 370
மார்டின் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370ல் பயணம் செய்ய டிக்கெட் எடுத்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் வேறு விமானம் மூலம் தாய்வானில் நடந்த போட்டியில் கலந்து கொள்ள சென்றார். இதனால் அவர் அப்போது மரணத்தில் இருந்து தப்பித்தார்.
எம்.ஹெச். 17
அவர் உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17ல் பயணம் செய்ய டிக்கெட் எடுத்தார். ஆனால் பணத்தை சேமிக்க விலை குறைவாக டிக்கெட் வழங்கும் நிறுவன டிக்கெட்டை எடுத்ததால் மலேசிய விமானத்தில் அவர் செல்லவில்லை. அதன் மூலம் இரண்டாவது முறையாக மரணத்தில் இருந்து தப்பித்துள்ளார்.
தப்பித்துவிட்டேன்
என்னால் நம்பவே முடியவில்லை. நான் அந்த விமானத்தில் செல்லாமல் தப்பித்துவிட்டேன். அதில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மார்டின்.