பிரபாகரன் மகள் என சந்தேகித்து இசைப்பிரியாவை கைது செய்யும் காட்சிகள்... புதிய வீடியோ வெளியீடு!
லண்டன்: இலங்கை இறுதிப் போரில் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா தொடர்பான புதிய போர்க்குற்ற ஆதாரம் ஒன்றை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. ஆனால் இசைப் பிரியா போரின் போதே கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு கூறி வருகிறது.
இந்நிலையில் இலங்கை ராணுவத்தினரால் இசைப்பிரியா உயிரோடு கைது செய்யப்பட்ட வீடியோ ஆதாரத்தை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி நேற்று வெளியிட்டுள்ளது. கடற்கரை ஒன்றில் மேலாடையின்றி நீருக்குள் அமர்ந்திருக்கும் இசைப்பிரியாவை இலங்கை ராணுவத்தினர் வெள்ளைத் துணி ஒன்றைப் போர்த்தி இழுத்து வரும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.
இலங்கை ராணுவத்தினர் 6 பேர் இசைப் பிரியாவை பிடித்து வருவதும் அப்போது அவர்கள் பிரபாகரனின் மகள் என்று அவரைக் கூறுவதும் அதற்கு அவர் ஐயோ அது நானில்லை என்று அழுவதும் அந்த காட்சியில் பதிவாகியுள்ளது.
இதன் மூலம் இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட நிலையிலும், துணி அகற்றப்பட்ட நிலையிலும் இசைப்பிரியாவின் உடல் கிடந்த காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் இந்த புதிய போர்க்குற்ற ஆதார வீடியோ வெளியாகி இருப்பது அந்நாட்டுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது