ஏப்ரல் 12ம் தேதிக்குள் மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க முடியுமா?
பெர்த்: இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியை 12 நாட்களுக்குள் கண்டுபிடித்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிய மலேசிய விமானத்தை பல்வேறு நாடுகள் தீவிரமாக தேடி வருகின்றன. ஆனால் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் விமானத்தின் கருப்பு பெட்டியை விரைந்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கருப்பு பெட்டி
விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் தான் விமானம் எப்படி கடலுக்குள் விழுந்தது என்ற விவரம் தெரிய வரும். கருப்பு பெட்டி என்று அழைக்கப்பட்டாலும் அது பளிச்சென்ற ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்கும்.
பேட்டரி
கருப்பு பெட்டியில் இருந்து வரும் ஒரு வகை ஒலியை வைத்து தான் அதை கண்டுபிடிக்க முடியும். இந்நிலையில் அப்பெட்டியின் பேட்டரியின் ஆயுள் வரும் 7ம் தேதி முடிகிறது. இதையடுத்து பெட்டியில் இருந்து வரும் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் 12ம் தேதி முழுவதுமாக நின்றுவிடும்.
தேடல்
வரும் ஏப்ரல் மாதம் 12ம் தேதிக்குள் அதாவது கருப்புப்பெட்டியில் இருந்து வரும் ஒலி முழுவதுமாக நிற்பதற்குள் அதை கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா
கருப்பு பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டுபிடிக்கும் கருவியை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. ஆனால் அந்த கருவி தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியை வந்தடைய இன்னும் 2 முதல் 3 நாட்கள் ஆகும்.
வானிலை
கருப்பு பெட்டியை விரைந்து கண்டுபிடிக்க வேண்டிய காட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய பெருங்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக தேடல் பணி பாதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.