அமெரிக்காவில் பயங்கரம்: அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
ஆஸ்டின்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பாஸ்ட்ராப் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 வயது சிறுவன் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில தலைநகரான ஆஸ்டினில் இருந்து 35 மைல் தொலைவில் உள்ளது பாஸ்ட்ராப் நகரம். 7 ஆயிரத்து 500 பேர் வசிக்கும் அந்த நகரில் சனிக்கிழமை மாலை ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதில் 3 வயது சிறுவன், 2 பெண்கள் பலியாகினர். பின்னர் அந்த நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பலியானவர்கள் அலெக்ஜான்ட்ரோ மார்டினெஸ்(20), எரிகா ரோட்ரிகஸ்(21), பாலா நினோ(20) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
பலியான சிறுவன் மற்றும் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவரின் விபரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த குழந்தை ஒன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அந்த குழந்தையின் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.