வெள்ளாக்காடாக தமிழகம்... உதவிகளை அனுப்ப பிரான்ஸ் ஈழத் தமிழர்கள் வேண்டுகோள்
யாழ்ப்பாணம்/பாரீஸ்: வரலாறு காணாத பெருமழையில் தமிழகம் வெள்ளக்காடாகி வரும் நிலையில் ஈழத் தமிழர்களும் தங்களது நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நூறாண்டு காணாத பெருமழையால் சென்னை உருக்குலைந்து போனது... ஒரு மாத கனமழையால் கடலூர் கடல் போல ஆனது. ஏரிகள், ஆறுகள் நிரம்பி வழிந்தோடுவதால் காஞ்சிபுரமும் திருவள்ளூரும் தண்ணீர்தேசமாகிப் போனது..
பேரவலத்தில் தத்தளிக்கும் இந்த மாவட்டங்களின் துயரைத் துடைக்க தமிழகம் முழுவதும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதேபோல் ஈழத் தமிழர்களும் தாய்த் தமிழ் உறவுகளுக்காக தங்களது நிவாரணப் பொருட்களை அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நினைத்துப் பார்க்க முடியாத துயரைத் தமிழகம் சந்தித்துள்ளது. எங்களுடைய தமிழ் உறவுகள் இன்று இயற்கைச் சீறத்தால் ஆற்றொண்ணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்; அவர்களின் துயரமும் துன்பமும் எம்மக்கள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வலி, வேதனையையும் எம்மால் நன்கு உணர முடியும். தாய்த் தமிழக தொப்புள்கொடி உறவுகளின் துயரைத் துடைப்பது உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனின் மிகப் பெரிய கடமையாகும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும் பிரான்சில் இயங்கும் தமிழ் அமைப்புகள், கோவில்கள், சங்கங்கள் தம்மால் ஆன உதவிகளை தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.