பூமியை நோக்கி பாய்ந்து வரும் விண்கல்... ஜஸ்ட் மிஸ் ஆகும் என்கிறது நாசா!
வாஷிங்டன்: மிகப் பிரமாண்டமான ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், ஆனால் அச்சப்படத் தேவையில்லை என்றும் நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விண்கல்லுக்கு 2004 பிஎல் 86 என்று பெயரிட்டுள்ளனர். இந்த விண்கல்லானது, இந்த மாத பிற்பகுதியில் பூமியை மிக நெருங்கி வரும் என்றும், அதேசமயம், பூமிக்கு இந்த விண்கல்லால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இந்த விண்கல் மிகப் பெரியதாகும். இது பூமியை மிக நெருங்கி வரும்போது அதன் தொலைவானது பூமியிலிருந்து தோராயமாக 7,45,000 மைல்களாக இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. இதை நல்ல பைனாகுலர் மூலம் பார்க்கலாம் என்றும் நாசா கூறியுள்ளது.
ஜனவரி 26ம் தேதி இந்த விண்கலமானது பூமிக்கு மிக நெருக்கத்தில் வருமாம். அடுத்த 200 ஆண்டுகளுக்கு இது பூமிக்கு அருகிலேயே இருக்கும் என்றும் நாசா விஞ்ஞானி டான் இயோமன்ஸ் கூறியுள்ளார். இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று ஆறுதல் தகவலைத் தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானிகள், இதன் அளவு மற்றும் பூமிக்கு மிக அருகில் வரும் தன்மை ஆகியவை காரணமாக இது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர்.
வீடியோ:
இந்த விண்கல்லை ஜனவரி 26ம் தேதி இரவு நன்றாகப் பார்க்க முடியுமாம். ஆனால் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடையாது. மாறாக, அமெரிக்க கண்டம், ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் தான் இதைத் தெளிவாகப் பார்க்க முடியுமாம். வானிலை தெளிவாக இருக்கும்பட்சத்தில் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பைனாகுலர் மூலமாக இந்த விண்கல்லைப் பார்க்க முடியும்.
இந்த விண்கல்லானது மணிக்கு 35,000 மைல்கள் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறதாம்.